Published : 23 Feb 2024 03:02 PM
Last Updated : 23 Feb 2024 03:02 PM

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படுமா? - தேர்தல் ஆணையம் விளக்கம் @ உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில், “எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி கடந்த 6-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், எங்களது மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

எனவே, கடந்த 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், ''இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழ் மாநில காங்கிரஸ் அளித்த மனுவில் சில குறைகள் உள்ளன. அந்த குறைகளைச் சரி செய்து மீண்டும் மனு அளித்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும். மேலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸின் மனு பரிசீலிக்கபடும்'' என விளக்கம் அளித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x