

சென்னை: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில், “எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி கடந்த 6-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், எங்களது மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, கடந்த 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.