Published : 01 Feb 2018 10:33 AM
Last Updated : 01 Feb 2018 10:33 AM

டெல்லியிடம் இருந்து புதுச்சேரி கற்க வேண்டும் : ஆளுநர் கிரண்பேடி கருத்து

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட டெல்லி போன்ற யூனியன் பிரதேசத்தில் இருந்து புதுச்சேரி கற்றுக்கொள்ள வேண்டும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வாட்ஸ் அப் மூலம் நேற்று விடுத்த செய்தி விவரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட டெல்லி போன்ற யூனியன் பிரதேசத்தில் இருந்து புதுச்சேரி கற்றுக்கொள்ள வேண்டும். ஆட்சி நிர்வாகத்தை அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

கால்வாய்கள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை நீண்டகாலமாக சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் நீர்வரத்து தடைபடுகிறது.

இதுபோன்ற ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டிடங்களை கட்டி வைத்திருக்கும் பணக்காரர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று தங்கள் மீதான நடவடிக்கைக்கு தடை ஆணை பெற்று விடுகின்றனர். இதுதொடர்பான தீர்ப்புகள் நீதிமன்றத்தில் வெளியாக காலதாமதம் ஏற்படும்போது ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து தடைபடுகிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது பொருள்செலவு ஏற்படுகிறது. இதற்கு ஆகும் செலவு மக்கள் பணம். இது சமுதாயத்துக்கு பேரிழப்பாக மாறுகிறது.

மற்றவர்களின் தவறுகளில் இருந்து புதுச்சேரி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் வருவார்கள், போவார்கள். ஆனால், இதை கண்காணிக்கும் பொறுப்பு அதிகாரிகளின் கையில் உள்ளது. அதிகாரிகள் தவறு செய்யும்போது மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படும். அதேநேரத்தில் நல்லது செய்தால் மக்கள் பலன் அடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x