Published : 02 Feb 2018 08:46 PM
Last Updated : 02 Feb 2018 08:46 PM

மணிகண்டன் மரணம் எதிரொலி: போக்குவரத்து போலீஸாருக்கு உடலோடு பொருத்தும் கேமரா அறிமுகம்

மணிகண்டன் மரணத்தை அடுத்து போக்குவரத்து காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது போலீஸார் உடலோடு பொருத்தும் கேமரா அறிமுகப்படுத்தப்ப்ட்டுள்ளது.

காவல்துறையில் பொதுமக்கள், பொது வாகன ஓட்டிகள் அதிகம் சந்திக்கும் துறை போக்குவரத்து துறை ஆகும். போக்குவரத்து காவல்துறையில் பல மாற்றங்கள் வந்தாலும் இன்னும் பிரிட்டீஷ் கால மனப்பான்மையுடன் பொதுமக்களை, வாகன ஓட்டிகளை அணுகும் போக்கு தொடர்கிறது.

இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ, வேன், கால்டாக்சி, லாரி ஓட்டுநர்களை மடக்கும் போது எடுத்தவுடன் ஏக வசனத்தில் பேசுவது, தரக்குறைவாக பலர் முன் திட்டுவது, காக்கவைப்பது, அலைக்கழிப்பது, தாக்குவது போன்றவை நடக்கிறது.

இவைகள் அவ்வப்போது வெளியில் வந்தாலும், புகாராக தெரிவிக்கப்பட்டாலும் போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டி தவிர்க்கச்சொன்னாலும் இவை தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக வேலைக்குச்செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கல்லூரி மாணவர்களிடம் கடுமையாக நடப்பதால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இவை தவிர அபராதம் விதிக்காமல் இருக்க அபராதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பெற்றுக்கொள்வதும் பல இடங்களில் நடக்கிறது. இதனால் தங்கள் உழைப்பும், சேமிப்பும் பறிபோகும் ஆத்திரத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

மறுபுறம் தங்கள் மேல் உள்ள பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, வழக்குகள் போடவேண்டும் என மேலதிகாரிகள் நிர்பந்தம், பலமணி நேரம் வெயில், மழை பாராமல் நிற்பதால் வரும் உடல் சோர்வு போன்றவற்றை யாரும் கருத்தில் கொள்வதில்லை என போக்குவரத்து போலீஸார் கூறுகின்றனர்.

இதில் முத்தாய்ப்பாக கடந்த வாரம் தரமணியில் போக்குவரத்து போலீஸார் தரக்குறைவாக திட்டியதாலும் தாக்கியதாலும் மனம் உடைந்த மணிகண்டன் என்ற இளைஞர் தீக்குளித்து இறந்து போனார். இதையடுத்து பொதுமக்கள் கோபம் கடுமையாக போலீஸார் மீது திரும்பியது.

பல தளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தது. போக்குவரத்து போலீஸார் தங்கள் செயல்பட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்நிலையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் போக்குவாரத்து உதவி ஆய்வாளர்களை அழைத்து அறிவுரை வழங்கினார்.

போக்குவரத்து போலீஸார் பொதுமக்களிடையே எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிலையில் இருதரப்பிலும் உள்ள குறைகளை களையவும் வெளிப்படைத்தன்மை உருவாகவும் ஏதுவாக சில நடைமுறைகளை போக்குவரத்து காவல்துறையில் உயர் அதிகாரிகள் அமல்படுத்த துவங்கியுள்ளனர். அதன் முதற்கட்டமாக வெகுகாலமாக பரிசீலனையில் இருந்த உடலோடு கூடிய கேமராவை பொருத்தும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.

முதல்கட்டமாக நான்கு முக்கிய காவல் நிலையத்தில் பணியாற்றும் போக்குவரத்து போலீஸாருக்கு இந்த கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இது குறித்து காவல் ஆணையர் தரப்பில் இன்று வெளியான அறிக்கை:

போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே உள்ள வேறுபாடுகளை களையவும் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், காவல் அதிகாரிகளுக்கு “body worn camera” எனப்படும் கேமரா கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் 4 கேமரா கருவிகள் தேனாம்பேட்டை, மெரினா, கோயம்பேடு மற்றும் பூக்கடை ஆகிய போக்குவரத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கேமராக்களில் பதியப்படும் வீடியோக்கள் மூலமாக போக்குவரத்து காவல் துறையினருக்க எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களை அகற்றவும் உதவும். இவ்வாறு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x