Published : 12 Feb 2024 04:33 AM
Last Updated : 12 Feb 2024 04:33 AM

இடைநிலை ஆசிரியர் போராட்டம் பிப்.19-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தொடங்கவிருந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம், பிப்.19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் (எஸ்எஸ்டிஏ) பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததும் 2009-ம் ஆண்டுக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கப்படும் என்று அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதை வலியுறுத்தி கடந்த செப்டம்பரில் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஊதியமுரண்பாடு தொடர்பாக ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுவின்அறிக்கை 3 மாதத்தில் முதல்வரிடம் ஒப்படைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது 4 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், அரசு சார்பில் இதற்கான குழு அமைத்து ஓர்ஆண்டாகியும் எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று(பிப்.12) முதல் டிபிஐ வளாகத்தில்எங்கள் இயக்கத்தின் சார்பாகதொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நிர்வாக காரணங்களால் போராட்டம் பிப்.19-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x