Published : 11 Feb 2024 05:52 AM
Last Updated : 11 Feb 2024 05:52 AM

தண்டவாளம் புதுப்பித்தல் பணிக்கு ரூ.1,240 கோடி ஒதுக்கீடு; ரயில்களின் வேகம் 130 கி.மீ. வரை அதிகரிக்கும்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 6 கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, கூடுதல் பாதை அமைப்பது, ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில் பாதை மேம்படுத்தப்பட்ட முக்கிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல்-கூடூர்,சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல்-ரேணிகுண்டா வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ வரைரயில்கள் இயக்கப்படுகின்றன.

மொத்தம் 413.62 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இந்தப் பாதைகளில் 130 கி.மீ. வரையிலான வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையில், மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்குரூ.12,173 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தண்டவாளம் புதுப்பித்தல் பணிக்காக மட்டும் ரூ.1,240 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல்வேறு வழித்தடங்களில் ரயில் தண்டவாளங்களை மேம்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2024-25-ம் ஆண்டு நிதியாண்டுக்கு 10 சதவீதம் கூடுதல் நிதி கிடைத்துள்ளது. இதனால் பல்வேறு பணிகளை வேகப்படுத்த முடியும். குறிப்பாக, ரயில் தண்டவாளம் புதுப்பித்தல், மேம்படுத்தல், நவீனப்படுத்தல் மற்றும் சிக்னல் மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். இதன்மூலமாக, அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்.

தெற்கு ரயில்வேயில் முக்கியவழித்தடங்களில் ரயில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் ஜோலார்பேட்டை-சேலம்-கோயம்புத்தூர் (286 கி.மீ. தொலைவு) மார்க்கத்தில் ரயில் வேகத்தை 130 கிலோமீட்டராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 2025-26-ம் நிதியாண்டில், சென்னை எழும்பூர்-விழுப்புரம்-திருச்சி (336.04 கி.மீ.) மார்க்கத்தில் மணிக்கு 130 கி.மீ.க்கு ரயில்வேகத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி-திண்டுக்கல்-மதுரை-திருநெல்வேலி (311.11 கி.மீ.) மற்றும் நாகர்கோவில்-திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் 2026-27-ம் நிதியாண்டில் மணிக்கு 130 கி.மீ. வரை ரயில் வேகத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பாலங்களை வலுப்படுத்தல், பாதைவளைவுகளை எளிதாக்குதல், தண்டவாளத்தைக் கடந்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைத்தல், சிக்னல்களை மேம்படுத்தல், உயர்மட்ட மின்பாதை மேம்படுத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவற்றை நிறைவேற்றுவது மூலமாக, ரயிலின் வேகம் அதிகரித்து, பயண நேரம் கணிசமாக குறையும். இவ்வாறு தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x