Last Updated : 10 Feb, 2024 12:50 PM

 

Published : 10 Feb 2024 12:50 PM
Last Updated : 10 Feb 2024 12:50 PM

கோவையில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கோவை அல்அமீன் காலனியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திய வீடு. படம்: ஜெ.மனோகரன் 

கோவை: கோவையில் 12 இடங்களில் என்ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். கோவை உக்கடத்தை அடுத்த, கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். போலீஸாரின் விசாரணையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின், மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 14 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் பல்வேறு இடங்களில் அடிக்கடி சோதனை நடத்தினர். கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களின் இடங்கள், அவர்களுக்கு தொடர்புடைய இடங்கள் என பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் அரபிக் மொழியை கற்றுக் கொடுக்கும் கல்லூரியிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் போது, அக்கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவு தொடர்பான ஆவணங்கள், அந்த அமைப்புக்கு ஆட்களை மூளைச்சலவை செய்து அனுப்புவது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. அதனடிப்படையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஆதரவு விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ சென்னை பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு வழக்குப்பதிந்தனர். அதனடிப்படையில், மேற்கண்ட வழக்கு தொடர்பாக கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்தாண்டு சோதனை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக கோவையில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (பிப்.10) சோதனை நடத்தினர். இதற்காக திட்டமிட்டப்படி, என்.ஐ.ஏ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இன்று காலை கோவைக்கு வந்தனர். கோவை அல் அமீன் காலனியில் ஹபிபுல்லா வீடு, அருள் நகரில் (அன்புநகர்) அபுதாகீர் வீடு, என்.எஸ்.கார்டனில் பைசல் ரகுமான் வீடு, அற்புதம் நகரில் சலாவுதீன் வீடு, கரும்புக்கடை கிரீன் கார்டனில் அனீஷ் முகமது வீடு, பால் கம்பெனி, ஆர்.எஸ்.புரத்தில் கமீல் வீடு, குனியமுத்தூர் ராஜூநகரில் சுதிர் முகமது வீடு, சீரபாளையம் மதுக்கரையில் முகமது அலி ஜின்னா வீடு, போத்தனூர் அமீர்சாகிப் வீதியில் நாசர் வீடு மற்றும் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அரபிக் கல்லூரியில் நேரடியாக படித்தவர்கள், ஆன்லைன் வாயிலாக படித்தவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதன் அடிப்படையில் மேற்கண்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் வட்டாரத்தினர் தெரிவித்தனர். இந்தச் சோதனையில் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x