Published : 28 Feb 2018 09:22 AM
Last Updated : 28 Feb 2018 09:22 AM

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டாக்டரை போல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மனநலம் பாதித்த பெண் கைது

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று வழக்கம் போல் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வந்தபோது, தற்போதுதான் மருத்துவர் வந்து சென்றதாக நோயாளிகள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனையில் சுற்றிக் கொண்டிருந்த அந்த பெண்ணை பிடித்து செங்கல்பட்டு நகர போலீஸில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்த சகிலா பாபி என்பது தெரியவந்தது. நர்சிங் முடித்திருக்கும் அவர், சற்று மனநலம் சரியில்லாமல் இருப்பதும், இதேபோல் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் பேசும்போது, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் பயில்வதாகவும், தேர்வு எழுத வந்ததாகவும் போலீஸாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நோயாளிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லையோ என்று கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மருத்துவமனை முதல்வர் உஷா சதாசிவம் கூறும்போது, “ஒரு பெண் காலையில் மருத்துவமனையில் மருத்துவர் என கூறி சிகிச்சை அளித்துள்ளார்.

சந்தேகம் அடைந்த ஊழியர்கள் தகவல் அளித்ததன் பேரில் விசாரணை மேற்கொண்டோம் அவர் மருத்துவர் இல்லை என்றும் சற்று மனநலம் பாதித்தவர் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸில் ஒப்படைத்தோம்.

சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு மருத்துவமனை நிர்வாகம் அளித்து வருகிறது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x