Published : 07 Feb 2024 07:46 PM
Last Updated : 07 Feb 2024 07:46 PM

ஒலி மாசு புகார்: ஆழ்வார்ப்பேட்டை தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: ஒலி மாசு புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் புதிதாக 10 மாடி மருத்துவமனை கட்டி வருகிறது. கட்டுமானப் பணியில் ஆழ்துழாய் அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுகிறது.

அந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் மூத்த குடிமக்கள். மேலும், அப்பகுதியில் பள்ளி மற்றும் பல்வேறு குடியிருப்புகளும் இருப்பதால் கட்டுமான பணிகளின் சப்தத்தால் அனைவருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. நள்ளிரவையும் தாண்டி அதிகாலை வரை இக்கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினேன்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒலி மாசு ஏற்படுவதால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சிஎம்டிஏ, காவல் துறையினருக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அஸ்திவாரம் போடும் பணியை மேற்கொள்ள மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை தடைவிதிக்க வைக்க வேண்டும். ஒலி மாசுவை கட்டுப்படுத்தாமல் விதிகள் மீறுவதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிஎம்டிஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புவனேஸ்குமார், கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. உரிய கட்டணம் செலுத்தும் பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என அறிக்கை அளித்தார்.

இதனை பதிவு செய்தகொண்ட நீதிபதிகள் தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x