Published : 06 Feb 2024 03:11 PM
Last Updated : 06 Feb 2024 03:11 PM

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம் தகவல் @ உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, உட்கட்சி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சியின் சட்ட விதிகளின்படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச் செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தற்போது அதுபோன்ற நிலை அதிமுகவில் இல்லை. மக்கள் பிரதிநிதித்து சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்கவில்லை. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் புகாருக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நேரில் ஆஜராகி ‘உட்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை. சர்வாதிகார முறையில் நடைபெற்றதால், நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும்’ என குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து, அது தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. சின்னம் தொடர்பான விவகாரத்தில்தான் தலையிட முடியும்’ என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கில் பிரதிவாதியாக அதிமுகவை மனுதாரர் சேர்க்கவில்லை. உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்டுவிட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என உத்தரவிட்டார். மனுதாரர் கோரிக்கை தொடர்பாக, சிவில் நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x