Published : 06 Feb 2024 05:20 AM
Last Updated : 06 Feb 2024 05:20 AM

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம்: ஸ்பெயின் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

ஸ்பெயினில் வாழும் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். உடன் துர்கா ஸ்டாலின், தமிழக தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முதல்வரின் செயலர் உமாநாத், ஸ்பெயினுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக்.

சென்னை: வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம். நீ்ங்களும் பிறந்த மண்ணான தமிழகத்துக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று ஸ்பெயினில் உள்ள தமிழர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், ‘ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்’ எனும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் இருக்கிறோமா, வெளிநாட்டில் இருக்கிறோமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினுக்கு இப்போதுதான் வருகிறேன். ஆனால், பலமுறை வந்ததுபோன்ற உணர்வை தரும் வரவேற்பை நீங்கள் அளித்துள்ளீர்கள். உங்கள் தாய் மண்ணான தமிழகத்துக்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்கிறீர்கள்; செய்யப் போகிறீர்கள்; செய்ய வேண்டும்.

வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு துணைநிற்க வேண்டும் என்றஅடிப்படையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு அமைப்பை உருவாக்கினார். சில நாட்களுக்குள்ளாக ஆட்சி கலைக்கப்பட்டு. அந்த அமைப்பு செயல்படாமல் போய்விட்டது.

இப்போது மீண்டும் நமது ஆட்சி உருவாகி இருக்கிறது. கருணாநிதி செய்யநினைத்ததை நாங்கள் செய்ய காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம். சமீபத்தில்கூட, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களை சென்னைக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்து பேசி, அவர்களது பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம்.

உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலமாக தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்திருக்கிறோம். அது தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கு மட்டுமல்ல; இந்தியாவைக் கடந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் பெருமைதான்.

பல்வேறு நாடுகளுக்கு சென்று இருந்தாலும், ஸ்பெயின் நாட்டுக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். என் மீது பாசமும்,நேசமும் அன்பும் கொண்டு ஒவ்வொருவரும் அளித்த உபசரிப்பு நெகிழ வைத்து இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முதல்வரின் செயலர் உமாநாத், ஸ்பெயினுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர்: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜன. 27-ம் தேதி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர், முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். பிறகு நடைபெற்ற சந்திப்புகளின்போது, பிரபலமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸின் சர்வதேச மற்றும் நிறுவனத் தொடர்பு தலைமை அதிகாரி லாரா பெர்ஜானோ, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ள அபர்ட்டிஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. ஆக்சியானா நிறுவனமும் முதலீடு செய்ய உறுதி அளித்தது. தொடர்ந்து, அம்போ வால்வ்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த நிறுவனங்களும் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன.

ஸ்பெயின் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நாளை (பிப்.7) காலை 8.30 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவரை வரவேற்க, சிறப்பான ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x