Published : 14 Feb 2018 07:29 AM
Last Updated : 14 Feb 2018 07:29 AM
முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடக்கிறது. இதில் நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் நாளில் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு, அதில் அறிவிக்கப்படும் திட்டங்கள், நிதி ஒதுக்கம் தொடர்பாக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்காக தமிழக அமைச்சரவை, முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நாளை பிப்.15-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூடுகிறது.
இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் வெளியாக உள்ள அறிவிப்புகளுக்கான ஒப்புதல் அளிக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்று நாளை மறுநாள் (16-ம் தேதி) ஓராண்டு நிறைவு பெறுகிறது. இது குறித்தும் அரசின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி இணைந்தன. ஓபிஎஸ் துணை முதல்வரானார். அதன்பின் பின், முதல் அமைச்சவைக் கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி நடந்தது. நாளை நடப்பது இந்த அரசின் 2-வது அமைச்சரவைக் கூட்டமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT