Last Updated : 30 Jan, 2024 09:23 PM

 

Published : 30 Jan 2024 09:23 PM
Last Updated : 30 Jan 2024 09:23 PM

“ஒரே நாடு, ஒரே தேர்தலால் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே சாதகம்” - அன்புமணி ராமதாஸ் கருத்து

விழுப்புரம்: "ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது, "சென்னையில் பொதுவெளியில் பசுமை பொது பூங்கா வேண்டும். இப்போதுள்ள செம்மொழி பூங்கா குறைந்த பரப்பளவு கொண்டது. தொல்காப்பியர் பூங்காவை முழுமையாக பயன்படுத்த முடியாது. கோயம்பேடு காய்கறி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது. கோயம்பேடு மாநகர பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்ற உள்ளதாக செய்திகள் வருகிறது. வெளி நாடுகள், வெளிமாநிலங்களில் மிகப்பெரிய அளவில் பொது பூங்கா உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் வைக்ககூடாது. பூங்கா மட்டுமே வரவேண்டும்.

வேறு ஏதாவது அறிவித்தால் கடுமையான போராட்டம் நடத்துவோம். வேளாண் பட்டதாரிகளுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்கப்படவில்லை என்பது உண்மைதான். வேலைவாய்ப்புகளை உருவாக்க நிறைய வாய்ப்பு உள்ளது. எங்களின் நிழல் நிதி அறிக்கையை படித்தாலே செயல்படுத்தலாம். என்.எல்.சி தமிழகத்திற்கு தேவையே இல்லை. அதனை நிரந்தரமாக மூட வேண்டும். மின் தேவையை விட உற்பத்தி 2 மடங்கு உள்ளது. அப்புறம் ஏன் நெய்வேலியில் மின் உற்பத்தி செய்யவேண்டும். சிப்காட்டை விலை நிலங்களில் அமைக்காமல் தரிசு நிலங்களில் அமைக்கவேண்டும்.

மக்களவை தேர்தல் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது குறித்து என் கருத்து என்னவென்றால் 1952, 57, 62, 67 வரை முழுமையாக ஆட்சிகள் நடைபெற்றது. அதன்பின் பாதியில் 356 பிரிவை பயன்படுத்தி ஆட்சி கலைக்கப்பட்டது. எங்கள் கேள்விகள், அச்சங்கள் என்னவென்றால், பெரும்பான்மை இல்லாத நிலையில் மத்திய அரசு ஒரே ஆண்டில் டிஸ்மிஸ் ஆனால் அடுத்த 4 ஆண்டுகள் என்ன செய்வது?. 4 ஆண்டுகள் கழித்து தேர்தல் வருமா? அல்லது அப்போதே தேர்தல் வருமா?. மத்திய அரசு டிஸ்மிஸ் ஆனது போல மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா?. மாநில அரசு கலைக்கப்பட்டால் மீண்டும் தேர்தல் வந்தால் இடைப்பட்ட காலகட்டத்திற்கு மட்டும்தான் தேர்வு செய்யப்பட்ட அரசு பதவி வகிக்குமா?. இது போன்ற பல சந்தேகங்கள் உள்ளது.

அதே நேரம் மத்திய அரசுக்கு எங்களின் யோசனைகளை சொல்லியுள்ளோம். உலகின் 80 நாடுகளில் முன்மொழிவு பிரதிநிதித்துவம் (Proportional representation) உள்ளது. அதில் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். கட்சிகளுக்குதான் வாக்களிப்பார்கள். இதனால் கட்சி தாவமுடியாது. எம்.எல்.ஏக்களை கட்சிதான் முடிவு செய்யும். அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும். இந்த யோசனையை பல ஆண்டுகளுக்கு முன்பே பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதனை பாமக மட்டுமே சொல்லிவருகிறது. ஒரே நேரத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் தேர்தல் வைத்தால் மத்திய பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு, மாநில பிரச்சினைகள் பின் தள்ளப்படும்.

இதனால் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். மத்தியில் தேர்தல் வைத்தால் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மாநிலங்களுக்கு தேர்தல் வைக்கவேண்டும். இப்படி வைத்தால் தொடர்ந்து இரண்டரை ஆண்டுக்குகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும். மேகதாது அணைக்கட்டு பணியை கர்நாடக அரசு தீவிரபடுத்தி இருப்பது உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. இது நடக்கபோவது இல்லை. தேர்தலுக்காக இப்படி நடத்துகிறார்கள். தமிழ்நாடு அனுமதி இல்லாமல் காவிரி படுகையில் எவ்வித கட்டுமானப்பணிகளையும் செய்யமுடியாது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கௌரவத்தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x