Published : 09 Feb 2018 08:52 AM
Last Updated : 09 Feb 2018 08:52 AM

தலைமைச் செயலக மக்கள் தொடர்பு அதிகாரியாக ஷேக் முகமது நியமனம்

தலைமைச் செயலக மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த கலைநேசன் மாற்றப்பட்டு, ஷேக் முகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில், மக்கள் தொடர்பு அதிகாரியாக கலைநேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். இவர், மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நியமிக்கப்பட்டவர் என்பதும், தற்போது டிடிவி.தினகரன் அணியில் உள்ள தி.நகர் முன்னாள் எம்எல்ஏ கலைராஜனின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக, குறிப்பிட்ட ஆண்டுகள் தலைமைச் செயலக மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர்கள் மாற்றப்படுவது வழக்கம்.அந்த வகையில், நேற்று கலைநேசன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், தொழிலாளர் நலத்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலக புதிய மக்கள் தொடர்பு அதிகாரியாக டி.ஷேக் முகமது நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக தமிழரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக ஷேக் முகமது இருந்தார். மேலும், இவர், அதிமுகவில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரான தமிழ் மகன் உசேனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமைச் செயலக மக்கள் தொடர்பு அதிகாரியாக ஷேக் முகமது இன்று பொறுப்பேற்கிறார்.

இதேபோல, சென்னை வள்ளுவர் கோட்டம் மக்கள் தொடர்பு அதிகாரி கலைச்செல்வன், விழுப்புரம் போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x