Published : 28 Jan 2024 04:06 AM
Last Updated : 28 Jan 2024 04:06 AM

“ஆளுநர் வந்து சந்திப்பதில் எனக்கு விருப்பமில்லை” - கீழ்வெண்மணி தியாகி பழனிவேல் தகவல்

தியாகி பழனிவேல்

நாகப்பட்டினம்: ஆளுநர் வந்து என்னை சந்திப்பதில் எனக்கு விருப்பமில்லை என கீழ்வெண்மணி தியாகி பழனிவேல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ( ஜன.28 ) நாகை மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். அதன் ஒருபகுதியாக, 1968-ம் ஆண்டு கீழ்வெண்மணி படுகொலையின் போது, துப்பாக்கி குண்டுப்பட்டு, உயிர் பிழைத்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர், தியாகி ஜி.பழனிவேலை சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து தியாகி ஜி.பழனிவேல் ( 71 ) கூறும் போது, “வர்க்கப் போராட்டத்தில் நிலக்கிழார்களுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் தொண்டர்களில் நானும் ஒருவன். அந்த போராட்டத்தின் போது, ஆதிக்க சக்திகளால் வெட்டப்பட்டு, குண்டடிப்பட்டு காயமுற்று பாதிக்கப்பட்டேன். அப்போதெல்லாம் வந்து சந்திக்காதவர்கள், தற்போது அரசியல் ஆதாயத்துக்காக ஆளுநர் வந்து சந்திக்க உள்ளார். ஆளுநர் என்னை வந்து சந்திப்பதில் எனக்கு விருப்பம் இல்லை” என தெரிவித்தார்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான வி.மாரிமுத்து நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார். எனவே, நாகை மாவட்டத்துக்கு வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்புக் கொடி காட்டப்படும். அங்குள்ள வீடுகள், பனை மரங்கள், சாலையோரங்களில் கருப்புக் கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x