Published : 25 Jan 2024 02:05 PM
Last Updated : 25 Jan 2024 02:05 PM

பூஜை அறையில் தீபம் ஏற்றும்போது நிகழ்ந்த சோகம்: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜனவரி 25) காலை உயிரிழந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகனான சசிமோகன் சென்னையை சேர்ந்த பூர்ணிமா என்பவரை மணம் முடித்து இருந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 18-ம் தேதி வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்ற முயன்ற போது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக பூர்ணிமா மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது உடையில் தீ பற்றி உடலில் 80 சதவீதம் அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.

இதை அறிந்த அவரது குடும்பத்தார் பூர்ணிமாவை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூர்ணிமாவின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x