Published : 06 Jan 2024 05:07 AM
Last Updated : 06 Jan 2024 05:07 AM

ஜனவரியில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் (ஜன. 6),நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:

லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வியாழக்கிழமை (நேற்று) பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

வரும் நாட்களிலும் பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இது அரிதான நிகழ்வு இல்லை. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் வடகிழக்குப் பருவமழை இதுபோல தீவிரமடைந்துள்ளது. வரும் 11-ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

வளிமண்டல கீழக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 8-ம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களிலும், வரும் 9-ம் தேதி சில இடங்களிலும், 10, 11-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மிக கனமழைக்கு வாய்ப்பு: இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, நாளை கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

பேரையூரில் 10 செ.மீ. மழை: ஜன. 5-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் பேரையூரில் 10 செ.மீ., விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 8 செ.மீ., விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறையில் 7 செ.மீ., சின்கோனாவில் 6 செ.மீ., விருதுநகர் மாவட்டம் சிவகாசி, கோவை மாவட்டம் சோலையாறு ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x