Published : 28 Dec 2023 06:16 PM
Last Updated : 28 Dec 2023 06:16 PM

மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெல்லை வண்ணார்பேட்டை ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா?

படங்கள்: மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையிலுள்ள ஆற்றுப்பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள நிலையில் அப்பாலத்தில் தற்போது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இப்பாலத்தை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். திருநெல்வேலி, பாளையங்கோட்டையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட வடபகுதியிலுள்ள மாவட்டங்களுக்கும், முக்கிய இடங்களுக்கும் பயணிகள் வாகனங்கள், சரக்கு லாரிகள் செல்லவும் வசதியாக வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தையொட்டி அமைக்கப்பட்ட சிறுபாலத்தின் வழியாக பாதாள சாக்கடை குழாய் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் வடக்கு புறவழிச்சாலை ஆற்றுப்பாலம் மூழ்கியதால் அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 3 நாட்களாக இந்த பாலத்தை மூழ்கடித்து பாய்ந்த வெள்ளத்தில் குடிநீர் குழாய்கள், பாதாள சாக்கடை குழாய்களுடன், சிறுபாலமும் அடியோடு சேதமடைந்தது.

இப்பாலத்தை தற்காலிகமாக சீரமைத்து கடந்த 2 நாட்களுக்குமுன் இலகுரக வாகனப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த பாலத்தில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்க பாலத்தின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

வாகன போக்குவரத்து தொடங்கியுள்ள இந்த பாலத்தின் உறுதி தன்மை குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. வெள்ளத்தால் இப்பாலத்தில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டிருந்தது. மேலும் அருகிலுள்ள சிறுபாலத்தின் கான்கிரீட் தூண்கள் உடைத்து ஆற்றுப்பாலத்தின் அடியில் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் இடைமறித்து கிடக்கின்றன. அத்துடன் உடைந்த ராட்சத குழாய்கள், ஆற்றுப்பாலத்தின் இருபுறமும் ஆற்றில் அடித்துவரப்பட்ட குப்பைகள், கழிவுகள், மரக்கிளைகள் நீரோட்டத்தை தடுத்து வருகின்றன.

இவ்வாறு நீரோட்டம் தடைபடும்போது ஆற்றுப்பாலத்தின் தூண்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகளும், இப்பகுதி மக்களும் தெரிவிக்கிறார்கள். எனவே நீரோட்டத்தை தடுக்கும் வகையில் இப்பகுதியில் காணப்படும் காங்கிரீட் தூண்கள், சேதமடைந்த ராட்சத குழாய் மரக்கிளைகள் குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலியின் முக்கிய போக்குவரத்து வழித்தடமான இந்த ஆற்றுப்பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதித்து, அதை முழுமையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

நெல்லை - மதுரை போக்குவரத்து மாற்றம்: திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை ஆற்றுப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலிருந்து தச்சநல்லூர் ரவுண்டானா வரை செல்லும் வடக்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலம் கடந்த 17-ம் தேதி வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த நிலையில் இருக்கிறது.

எனவே பயணிகளை ஏற்றி செல்லும் பேருந்துகள் நீங்கலாக சரக்கு ஏற்றிவரும் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதன்படி மதுரையிலிருந்து சரக்குகளை ஏற்றிவரும் கனரக வாகனங்கள் நான்குவழி சாலையில் டக்கரம்மாள்புரம் சென்று தெற்கு புறவழிச்சாலை வழியாக திருநெல்வேலி மாநகரத்துக்குள் வரவேண்டும். திருநெல்வேலியிலிருந்து சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று நான்கு வழிச்சாலைக்கு செல்ல வேண்டும்.

டேங்கர் லாரி, பால் டேங்கர் லாரி, அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் கனரக வாகனங்கள் மதுரையிலிருந்து வரும்போது சந்திமறித்தம்மன் கோயில் வழியாக ராம் தியேட்டர் வந்து, பரணி சந்திப்பு அண்ணா சிலை வழியாக வண்ணார்பேட்டை செல்ல வேண்டும். இதுபோல் தெற்கு புறவழிச்சாலையில் வரும் வாகனங்கள் கொக்கிரகுளம் தாமிரபரணி பாலம் வழியாக ஈரடுக்கு மேம்பாலம் வழியாக தென்காசி மற்றும் சங்கரன்கோவில் செல்ல வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x