Last Updated : 28 Dec, 2023 04:22 AM

 

Published : 28 Dec 2023 04:22 AM
Last Updated : 28 Dec 2023 04:22 AM

சுழற்சி முறையில் காய்கறிகள் சாகுபடி: முன்மாதிரியாக திகழும் மேலச்சாலூர் கிராமம்!

மேலச்சாலூரில் பகுதி பகுதியாக பிரித்து பயிரிடப்பட்ட காய்கறி பயிர்கள்

சிவகங்கை: சிவகங்கை அருகே மேலச்சாலூர் கிராம விவசாயிகள் ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் பயிரிட்டு, காய்கறிகள் சாகுபடியில் முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் தொடர் வறட்சி, விளைபொருட் களுக்கு போதிய விலை கிடைக் காதது உள்ளிட்ட காரணங்களால், பலர் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதனால் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் தரிசாக உள்ளன. ஆனால், சிவகங்கை அருகே மேலச்சாலூர் கிராம மக்கள் வறட்சி காலத்திலும் விவசாயத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் விவசாயிகள்.

ஒவ்வொருவருக்கும் 10 சென்ட் முதல் ஒரு ஏக்கர் வரை நிலம் உள்ளது. சிலர் பம்புசெட் மூலம் விவசாயம் செய்கின்றனர். சிறிய குட்டையில் தண்ணீர் கிடந்தாலும் அதை பயன்படுத்தி காய்கறி சாகுபடி செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட பயிரை மட்டும் அதிக அளவில் சாகுபடி செய்தால் விலை வீழ்ச்சி, திடீர் பூச்சித் தாக்குதலால் விளைச்சல் குறைவு போன்றவற்றால் சம்பந்தப்பட்ட அனைத்து விவசாயிகளும் கடும் நஷ்டத்தை சந்திக்க நேர்கிறது.

இதைத் தவிர்க்க, மேலச்சாலூர் விவசாயிகள் சுழற்சி முறை சாகுபடியை வெற்றிகரமாக கையாண்டு வருகின்றனர். அதாவது, ஒவ்வொரு விவசாயியும் தனது நிலத்தை 5 அல்லது 6 பாகங்களாகப் பிரித்து, வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். ஒவ்வொரு பயிரையும் குறைந்தது 5 முதல் 10 சென்ட் இடத்தில் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். இதன் மூலம் ஆண்டு முழுவதும் காய்கறி விளைச்சல் உள்ளது. இதனால், இக்கிராம மக்கள் சிவகங்கை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 100 கிராம மக்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.

அழகர்சாமி

இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகர்சாமி கூறியதாவது: மலைப்பிரதேச காய்கறிகளை தவிர, கருணைக்கிழங்கு, வெங்காயம், கத்தரி, வெண்டை, கொத்தவரை, அவரை, புடலை உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகளையும் சாகுபடி செய்கிறோம். குறைந்த தண்ணீர் இருந்தாலும், அதை பயன்படுத்தி ஏதாவதொரு காய்கறியை பயிரிடுவோம். நிலத்தை எப்போதும் தரிசாக விடமாட்டோம். நீர்நிலைகள், கிணறுகள் வறண்டுவிட்டாலும், தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து பயிர்களை காப்பாற்றி விடுவோம். இங்கு விளையும் காய்கறிகளை சுற்றியுள்ள சிவகங்கை, வாணியங்குடி, காஞ்சிரங்கால், சோழபுரம், இடையமேலூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்கிறோம். இக்கிராமத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினரையும் விவசாயப் பணி மேற்கொள்ள ஊக்குவித்து வருகிறோம். அவர்களும் ஆர்வமுடன் பயிர் சாகுபடியில் பங்கெடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x