Published : 28 Dec 2023 12:30 PM
Last Updated : 28 Dec 2023 12:30 PM

“சகோதர பாசத்துடன் உபசரித்து உற்சாகப்படுத்துபவர் விஜயகாந்த்” - இரா.முத்தரசன் புகழஞ்சலி

இரா.முத்தரசன் இரங்கல்

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் (71) இன்று அதிகாலையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். மதுரை மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் 1952 ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்த விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டில் திரைத்துறையில் நுழைந்து வெற்றிகரமாக வளர்ந்து “புரட்சி கலைஞர்” என அனைவராலும் ஏற்கப்பட்டார். காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் வேடத்தில் அதிகபட்ச திரைப்படங்களில் மிகச் சிறப்பாக நடித்த விஜயகாந்த் அனைவராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.

திரைத்துறையில் புகழ் பெற்ற விஜயகாந்த் தென்னிந்திய திரைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார். அவரது நடிப்புத் திறனுக்கு தமிழ்நாடு அரசு உட்பட பல்வேறு அமைப்புகள் ஏராளமான விருதுகள் வழங்கியுள்ளன. சிறுவயது முதலே அரசியல் ஆர்வம் மேலோங்கி இருந்ததால் 2005 செப்டம்பர் 14 ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி, 2006 சட்டமன்ற தேர்தலையும் 2009 நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்து பதிவான வாக்குகளில் 10 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்று, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முக்கிய இடம் பெற்றார்.

2006 விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட விஜயகாந்த் 2011 தேர்தலில், அஇஅதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளை வென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எதிர்கட்சித் தலைவராக ஐந்தாண்டுகள் செயல்பட்டார். தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு உருவான மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து அதற்கு தலைமை ஏற்று செயல்பட்டார்.

தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு இனிய பண்பாளர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். சகோதர பாசத்துடன் உபசரித்து உற்சாகப்படுத்துபவர். இந்தக் காலகட்டத்தில் அவரது உடல் பாதிப்பு அவரது அரசியல் மற்றும் பொது வாழ்வுக்கு பெரும் சவாலானது. அதனையும் மன வலிமையோடு, மருத்துவ சிகிச்சை பெற்று, எதிர்த்து போராடி வந்த விஜயகாந்த் காலமானார் என்பது தாங்கவொணா வேதனையளிக்கிறது. அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது அவரது பிரிவால் வாடும் அவரது வாழ்விணையர் பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் மைத்துனர் எல்.கே.சுதிஷ் மற்றும் தேமுதிக நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x