Published : 27 Dec 2023 05:55 AM
Last Updated : 27 Dec 2023 05:55 AM

ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.216 கோடியில் கட்டிடங்கள்: காணொலியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட வகுப்பறைகள், கிராமச் செயலகங்கள் உட்பட ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.215.81 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலை பள்ளிகளில் ரூ.800 கோடியில் 6,000 வகுப்பறைகள், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ரூ.250 கோடியில் 1,200 வகுப்பறைகள் நடப்பு ஆண்டில் கூடுதலாக கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கடந்த 2022-23-ம்ஆண்டில் ரூ.800 கோடியில் 5,653புதிய வகுப்பறைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. ஊரக பகுதிகளில் ‘குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு’ என்ற பெயரில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, தமிழகத்தின் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலை பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட 1,000 வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி திறந்து வைத்தார். தற்போது 2-ம் கட்டமாக 34 மாவட்டங்களில் ரூ.155.42 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 1,000 வகுப்பறைகளை முதல்வர் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

அதேபோல, 600 ஊராட்சிகளில் ‘கிராமச் செயலகம்’ கட்டப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். அதன்படி, முதல்கட்டமாக 21 மாவட்டங்களில் ரூ.20.54 கோடியில் கட்டப்பட்ட 50 கிராமச் செயலகங்களை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தேசிய கிராம சுயாட்சி திட்டம் மூலம் ரூ.24.39 கோடியில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டி முடிக்கப்பட்ட 102 கிராம ஊராட்சிமன்ற கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், நாமக்கல் மாவட்டம் - பரமத்தி, தேனி - போடிநாயக்கனூர், கிருஷ்ணகிரி - கெலமங்கலம், திருச்சி - மணச்சநல்லூர், கோவை - பொள்ளாச்சி தெற்கு ஆகிய இடங்களில் ரூ.15.46 கோடியில் கட்டப்பட்ட 5 புதியஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியசாமி, காந்தி, அன்பில் மகேஸ், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறைகளின் செயலர்கள் செந்தில்குமார், குமரகுருபரன், ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூ.6.25 கோடியில் 145 கார்கள்: இலகு ரக வாகன (எல்எம்வி கார்) ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் பொதுமக்களில் பலருக்கு சொந்த வாகனம் இல்லாததால், ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு பயிற்சி பள்ளியை அணுக வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, இனிவரும் காலங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வு நடத்த 145 இலகு ரக மோட்டார் வாகனங்கள் (கார்) கொள்முதல் செய்யப்படும் என்று 2023-24 போக்குவரத்து துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 54 மோட்டார் வாகன ஆய்வாளர் (பகுதி) அலுவலகங்களுக்காக அரசு சார்பில் ரூ.6.25 கோடியில் 145 கார்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இவற்றை அந்த அலுவலகங்களுக்கு வழங்கும் வகையில் 3 வாகனங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், உள்துறை செயலர் அமுதா, போக்குவரத்து, சாலை பாதுகாப்பு ஆணையர் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x