Published : 27 Dec 2023 05:02 AM
Last Updated : 27 Dec 2023 05:02 AM

சபரிமலையில் தமிழக பக்தர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: சபரிமலையில் தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் கேரள முதல்வரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயிலில், போதுமான முன்னேற்பாடுகள் செய்யாமல் பக்தர்களை வெகு நேரம் காத்திருக்க வைப்பதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட செய்து கொடுக்காமல் கேரள கம்யூனிஸ்ட் அரசு புறக்கணித்து வருகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, முறையான வரிசையில் வழிபட அனுமதிக்காமல், வேண்டுமென்றே பக்தர்களை சிரமத்துக்குள்ளாக்கும் கேரள அரசின் இந்தப் போக்கு கவலைக்குரியது.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற நிலையில், தமிழக அரசும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எனவே, சபரிமலையில் தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் கேரள முதல்வரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி, உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x