Published : 16 Jan 2018 09:09 AM
Last Updated : 16 Jan 2018 09:09 AM

கிருஷ்ணகிரி அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதல்: 5 மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி

கிருஷ்ணகிரி அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை நோக்கி நேற்று முன்தினம் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில், ஓட்டுநர், நடத்துநர் உட்பட 50 பேர் இருந்தனர். ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி பவர்கிரிட் அருகே உள்ள குருபராத்தபள்ளிப் பகுதியில் மாலை 4 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஓசூரைச் சேர்ந்த 5 மாணவர்கள் காரில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் திரும்பிக் கொண்டிருந்தனர். குருபராத்தபள்ளிப் பகுதியில் அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி எதிர் திசைக்குச் சென்றது. அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சுமார் 50 மீட்டர் தூரம் சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த ஓசூர் அப்பாவு நகரைச் சேர்ந்த சரவணபாபு மகன் மணீஷ் (21), சங்கர் மகன் சஞ்சய் (17), ஓசூர் டைட்டான் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் ஆதர்ஷ் (16), ஓசூர் ரயில் நிலையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணப்பா மகன் இசக்கியா (18), ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளி மகேஷ் மகன் ஆகாஷ் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்து சாலையோரம் கவிழ்ந்தபோது நடத்துநர் கோவிந்தராஜ்(55) பேருந்தில் இருந்து கிழே விழுந்துவிட்டார். அவர் மீது பேருந்து சக்கரம் ஏறியதில், நடத்துநர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளை, அங்கிருந்தவர்களும், போலீஸாரும் மீட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். 6 பேரின் சடலங்களும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்தில் உயிரிழந்தவர்களில் மணீஷ் தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார். சஞ்சய், ஆதர்ஷ், ஆகாஷ் ஆகியோர் ஓசூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். இசக்கியா ஓசூரில் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

மாணவர்கள் மணிஷ், சஞ்சய், ஆதர்ஷ், இசக்கியா ஆகியோர் காரில் பயணம் செய்ததும், மாணவர் ஆகாஷ் காரை ஓட்டிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ஓசூர் டிஎஸ்பி (பொறுப்பு) ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிவிபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x