Published : 09 Jan 2018 10:04 AM
Last Updated : 09 Jan 2018 10:04 AM
தனக்கு எதிராக அளிக்கப்பட்ட சாட்சி விவரங்களை தன்னிடம் வழங்கக்கோரி சசிகலா கேட்டிருந்த நிலையில், அந்த விவரங்களை வழங்க நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நீதிபதி அ.ஆறுமுகசாமி பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார். 15-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சசிகலாவுக்கு எதிராக சிலர் வாக்குமூலம் அளித்திருப்பதாகக் கூறி சசிகலாவை விசாரணைக்கு அழைக்க விசாரணை ஆணையம் முடிவு செய்திருந்தது.
அதற்காக கடந்த மாதம் சசிகலாவுக்கு சம்மனும் அனுப்பப்பட்டது. அதில் “சம்மன் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் நீங்களோ அல்லது உங்கள் தரப்பு வழக்கறிஞர் மூலமாகவோ அல்லது பிரமாண பத்திரமாகவோ, உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் உரிய நேரத்தில் தாங்கள் சாட்சியாக விசாரணைக்கு அழைக்கப்படுவீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுதாரருக்கு அவகாசம்
அதனைத் தொடர்ந்து சசிகலா தரப்பில் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “மனுதாரருக்கு எதிராக எந்த வகையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துக்கொண்டால்தான் உரிய பதிலை அளிக்க முடியும். எனவே மனுதாரருக்கு எதிராக சாட்சிகள் தெரிவித்த, விவரங்களை வழங்க வேண்டும். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு பதில் அளிக்க மனுதாரருக்கு அவகாசம் வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சசிகலா கேட்டிருந்த விவரங்களை அவரிடம் வழங்க விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. அவ்வாறு விவரங்களை வழங்க விசாரணை ஆணைய சட்டத்தில் இடம் இருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT