Last Updated : 18 Dec, 2023 04:44 PM

 

Published : 18 Dec 2023 04:44 PM
Last Updated : 18 Dec 2023 04:44 PM

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138 அடியாக உயர்வு: இடுக்கி மாவட்டத்துக்கு 2-ம் கட்ட எச்சரிக்கை

கோப்புப் படம்

கூடலூர்: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் இன்று (டிச.18) மாலை 4 மணிக்கு 138 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்துக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடியை உச்சஅளவாக கொண்டு நீர் தேக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்ச நீரை கேரளா வழியேதான் திறந்து விட முடியும். இதன்படி 2018-ல் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரினால் இடுக்கி மாவட்டம் பாதிக்கப்பட்டதாக கேரளா குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து மூன்று கட்ட எச்சரிக்கையும், மூன்று கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நவ.24 மற்றும் டிச.10 ஆகிய தேதிகளில் நீர்மட்டம் 136 அடியை எட்டியதால் முதற்கட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்ததால் 136 அடியில் இருந்த நீர்மட்டம் நேற்று 134.95 அடியாக குறைந்தது.

இந்நிலையில், நீர்வரத்து அதிகரித்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு 136 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்துக்கு மூன்றாம் முறையாக முதற்கட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து இன்று மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நீர்வரத்தைப் பொறுத்தளவில் விநாடிக்கு 8,867 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,867 கனஅடியாகவும் உள்ளது. நீர்மட்டம் 139 அடியாக உயர்ந்ததும் மூன்றாம் கட்ட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படும். தொடர்ந்து 140, 141, 142 அடியில் மூன்று கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டு உபரிநீர் கேரளாவின் பக்கம் திறக்கப்பட உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் நீர்மட்டமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இன்றும் சில இடங்களில் மழை தொடர்கிறது. வெள்ளத்தின் பாதிப்புகளை மக்கள் எக்ஸ் தளத்தில் பாதிப்புகளாக வெளியிட்டுள்ளனர். அதீத கனமழையால், குறிப்பாக நெல்லை மாநகரம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லையில் அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தாமிபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது.

முன்னதாக, தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழகஅரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “ட்விட்டர்”- மூலம் தெரிவிக்கலாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனிடையே, தென் மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதல் மழை பொழிந்துள்ளது. தென்காசியில் 60%, தூத்துக்குடியில் 80% இயல்பைவிட கூடுதல் மழை பொழிந்துள்ளது. இது அதி கனமழையே தவிர மேக வெடிப்பு அல்ல என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத இந்த மழையால் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய நான்கு தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இம்மாவட்டங்களின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். கோவையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதல்வர், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் உத்தரவுகள் வழங்கியுள்ளதாக தகவல் சொல்லப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x