Published : 25 Jan 2018 09:40 AM
Last Updated : 25 Jan 2018 09:40 AM
ரூ.60 கோடி மதிப்பீட்டில் 3 ஆயிரம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விரைவில் "ஸ்மார்ட் கிளாஸ்" வகுப்பறை அமைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில் கூறியிருப்பதாவது:-
2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல்கட்டமாக கிராமப்புறங்களில் 3 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
இந்த வகுப்பறையில் தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடம் நடத்தவும், அதேபோன்று அந்த வசதிகளைப் பயன்படுத்தி மாணவர்கள் பாடங்களை படிக்கவும் தேவையான தொழில்நுட்ப வசதிகள் செய்துகொடுக்கப்படும். இதற்காக ஸ்மார்ட் போர்டு, புரஜெக்டர், ஆடியோ வசதி, டேப்லட் மற்றும் கணினி, இண்டர்நெட் இணைப்பு வசதிகள் அங்கு இருக்கும். ஒவ்வொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் குறைந்தபட்சம் 10 டேப்லெட்டுகள் கொண்டதாக அமைந்திருக்கும். இன்டர்நெட் இணைப்பானது அளவில்லாத 4-ஜி சேவை உடையதாக இருக்கும். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT