Published : 20 Jan 2018 11:07 AM
Last Updated : 20 Jan 2018 11:07 AM

கோவை மாநகர குற்றச் செய்திகள்: ஒருதலைக் காதல் பிரச்சினை; மாணவர் தற்கொலை முயற்சி

ஒருதலைக் காதல் பிரச்சினை: மாணவர் தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் (20). கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, கோவை - அவிநாசி சாலை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானம் அருகே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காவலர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், காவலர் குடியிருப்பைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர் ஒருவரை ஒரு தலையாக இவர் காதலித்ததாகவும், அவரை சந்திக்க வந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், மாணவரின் தொல்லையால் அந்த இளம் பெண் வேலைக்கு செல்லாமல் இருந்தார் எனவும் போலீஸார் கூறுகின்றனர்.

மூதாட்டி கொலையில் ஒருவர் கைது

கோவை செல்வபுரம் தேவேந்திர வீதியைச் சேர்ந்தவர் ராமாயி அம்மாள் (77). தனியே வசித்து வந்த இந்த பெண்மணி, கடந்த 10-ம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதுகுறித்து செல்வபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். அதில், மூதாட்டியிடமிருந்து 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்நிலையில், கொலையில் தொடர்புடையதாக செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சேகர் (27) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள போலீஸார், அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஆதாயக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சம்பந்தப்பட்ட நபரை 10 நாட்களுக்குள் போலீஸார் கைது செய்துள்ளனர்.

18 பவுன் நகை வழிப்பறி: இருவர் கைது

கோவை சூலூர் அருகே உள்ள செஞ்சேரிபிரிவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி மயிலாத்தாள். நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு வந்த இரு மர்ம நபர்கள், மயிலாத்தாளின் கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ரவிச்சந்திரன் (61) வீட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் 11 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளது. அவர் தனது குடும்பத்துடன் மதுரைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, வீட்டில் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இவ்விரு சம்பவங்கள் குறித்து சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதேபோல, கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடந்த டிச.1-ம் தேதி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இரண்டு நபர்கள், அவரிடமிருந்து 9 பவுன் நகையை வழிப்பறி செய்து கொண்டு தப்பினர். இந்த வழக்கை ராமநாதபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சிவகங்கை காளையார்கோயிலைச் சேர்ந்த குகன்ஈஸ்வரன் (24), சிவகுரு (21) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x