Published : 13 Dec 2023 04:48 AM
Last Updated : 13 Dec 2023 04:48 AM

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: சென்னை பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுக பகுதி உட்பட எண்ணெய் கசிவு ஏற்பட்டஇடங்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை நீக்குமாறு சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை ஒரு குழு அமைத்தது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) வளாகம் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை பகுதிகளில் அந்த குழு ஆய்வு செய்து, கடந்த 11-ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பிறகு, சிபிசிஎல் வளாகத்தில் எண்ணெய் கசிவு உருவாகி பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக, எண்ணூர் கழிமுக பகுதியை அடைந்தது கண்டறியப்பட்டது. சிபிசிஎல் வளாகத்தில் இருக்கும் வெள்ள நீர் மேலாண்மை சிக்கல்களையும் அந்த குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, சிபிசிஎல் நிறுவனத்துக்கு வாரியம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுக பகுதி மற்றும் அருகே உள்ள இடங்களில் எங்கெல்லாம் கசிந்த எண்ணெய் தேங்கியுள்ளது என்பதை உடனே கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கசிவை கண்டறிந்து, அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை, தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொண்டு, அதுகுறித்த அறிக்கையை வாரியத்துக்கு உடனே வழங்க வேண்டும். தண்ணீரில் எண்ணெய் படர்ந்துள்ள பகுதியை கண்டறிந்து, அதை அகற்ற மேற்கொள்ளப்படும் திட்டத்தை உடனடியாக வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

சிபிசிஎல் மற்றும் அதனுடன் இணைந்த அலகுகள், மையங்களில் உள்ள கச்சா எண்ணெய் மற்றும் தயாரிப்பு எண்ணெய் பொருட்களை கொண்டு செல்லும் குழாய்கள், தொட்டிகளில் கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இனிமேல் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என்பதை சிபிசிஎல் உறுதிசெய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு, எண்ணெய் கசிவால் மக்களுக்குஏற்பட்டுள்ள வாழ்வாதார பாதிப்புகளுக்கு சிபிசிஎல்நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்.

சிபிசிஎல் வளாகத்தில் இருந்து எண்ணெய் கலந்த நீர், மாசுபட்ட நீர் வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டால், அத்தகைய செயல்பாடுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எண்ணெய் கசிவு அகற்றும் பணிகள் தீவிரம்: இந்நிலையில், தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தேவையான ஆட்கள், இயந்திரங்கள் மூலம் எண்ணூர் கழிமுக பகுதியில் எண்ணெய் கசிவைஅகற்றும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மிதக்கும் எண்ணெயை அகற்றும் பணியில் எண்ணெய் உறிஞ்சும் நவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மிதக்கும் எண்ணெய் படிமங்களை அகற்ற சிறப்பு இயந்திரங்கள் (Booms) கொண்டு வரப்பட்டுள்ளன. எண்ணெய் கழிவுகள், சேதமடைந்த பொருட்களை அகற்றும் பணியில் அனுபவம் மிக்க முகமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இங்கிருந்து அகற்றப்படும் அபாயகரமான கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உரிமம் பெற்ற பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும். இப்பணிகளை ஒருங்கிணைக்க, நாட்டுக்குப்பம் கிராமத்தில் சுற்றுச்சூழல், வனத் துறையால் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பல்லுயிர் இழப்புகளை விரைந்து மதிப்பீடு செய்யும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல், வனத் துறை மட்டுமன்றி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், கால்நடை பாதுகாப்பு, பால்வளம், மீன்வளம், வருவாய், சுகாதார துறைகளின் அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். எண்ணெய் அகற்றும் பணி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலர் உத்தரவு: இதற்கிடையே, எண்ணூர் கழிமுகப் பகுதியில் எண்ணெய் கசிவு அகற்றும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில், அமைக்கப்பட்ட மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மை தொடர்பான உயர்நிலை குழு கூட்டம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, எண்ணெய் கசிவால் அப்பகுதிமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடுசெய்ய, சென்னை மாவட்ட ஆட்சியருக்கும்,சென்னை மாநகராட்சிக்கும் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். போர்க்கால அடிப்படையில் எண்ணெயை அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சிபிசிஎல் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. தோல் நோய் மருத்துவர்களின் துணையோடு, தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் குழுவை சுகாதாரத் துறை நியமித்துள்ளது. மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணி மீன்வளத் துறையினால்மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு ஏற்கெனவேநடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x