Last Updated : 12 Dec, 2023 04:10 AM

 

Published : 12 Dec 2023 04:10 AM
Last Updated : 12 Dec 2023 04:10 AM

வைகை அணையில் இருந்து டிச.26 வரை தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆண்டிபட்டி: வைகை அணையிலிருந்து சிவ கங்கை மாவட்ட பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களுக்கு வரும் 26-ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து பூர்வீக பாசனப் பகுதி 1, 2, 3-ம் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட கடந்த 23-ம் தேதி அரசு உத்தரவிட்டது. இதன்படி முதற் கட்டமாக இப்பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக பூர்வீக பாசனப் பகுதி 2-ல் உள்ள சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. டிச. 11, 12 மற்றும் 13-ம் தேதி வரை விநாடிக்கு 1,200 கன அடியும், 14-ம் தேதி 1,180 கன அடி நீரும் திறந்துவிடப்பட உள்ளது.

மொத்தம் 413 மில்லியன் கன அடி நீர் இப்பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நூற்றுக் கணக்கான கண்மாய்கள், உறை கிணறுகளில் நீர்மட்டம் உயரும். 8,119 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 16-ம் தேதியிலிருந்து 20-ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மதுரை மாவட்ட பாசனப் பகுதிகளுக்கும் நீர் திறக்கப்பட உள்ளது.

அணையின் நீர்மட்டம் தற்போது 65.16 அடியாகவும் ( மொத்த உயரம் 71 ) நீர்வரத்து ஆயிரத்து 796 கன அடியாகவும் உள்ளது. நீர் வெளியேற்றத்தைப் பொருத்தளவில் ஆற்றின் வழியே 1,269 கனஅடி நீரும், கால்வாய் வழியே 600 கன அடி நீரும் சென்று கொண்டிருக்கிறது. வரும் 26-ம் தேதி வரை ஆற்றில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட உள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தின் கரையோரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x