Published : 23 Jan 2018 09:10 AM
Last Updated : 23 Jan 2018 09:10 AM
புதிய தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுவதுபோல, ஆலைகள் விரிவாக்கம், துறைகள் ஒப்புதல் ஆகியவற்றுக்கும் ஒற்றைச் சாளர முறையில் 29 நாட்களில் அனுமதி வழங்க முதல்வர் பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் கே.பழனிசாமியை, இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவர் பி.ரவிச்சந்திரன், துணைத் தலைவர் எம்.பொன்னுசாமி, தென்மண்டல பிரிவு துணைத் தலைவர் ஆர்.தினேஷ், மண்டல இயக்குநர் சதீஷ் ராமன், அசோக் லேலண்ட் தலைமை செயல் அதிகாரி வினோத் கே.தாசரி, முதன்மை துணைத் தலைவர் பி.ஜி.சந்திரமோகன், கெவின்கேர் தலைவர் சி.கே.ரங்கநாதன், எம்ஆர்எப் டயர்ஸ் நிறுவன தலைவர் கே.எம்.மேமன் ஆகியோர் சந்தித் தனர்.
இந்த சந்திப்பில் அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் கே.சண்முகம், தொழில்துறை செயலர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம், சிஐஐ நிர்வாகிகள் எம்.பொன்னுசாமி, பி.ரவிச்சந்திரன், ஆர்.தினேஷ் உள்ளிட்டோர் கூறியதாவது:
சிஐஐ சார்பில் முதல்வரை சந்தித்தோம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வணிக எளிதாக்குதல் சட்டம் கொண்டு வரப்பட்டது. முதலீட்டை ஈர்ப்பதற்காக, ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பித்தால் 29 நாட்களில் அனுமதி பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது. இதில், தற் போது 3 திட்டங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. மேலும் 15 பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிய ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதுபோல, முந்தைய ஆலைகள் விரிவாக்கம், மாறுதல் செய்யும்போதும் இவ்வாறு அனுமதி அளிக்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்தபோது கோரிக் கை விடுத்தோம். அதை முதல்வர் ஏற்றுக்கொண்டார். இது மிகப்பெரிய விஷயம்.
பொதுவாக அனுமதிக்காக செல்லும்போது சிஎம்டிஏ, டிடீசிபி, சுற்றுச்சூழல், மின்துறை அனுமதி ஆகியவற்றைப் பெற 2 ஆண்டுகள் வரை ஆகிறது என்றும் தெரிவித்தோம். ஒற்றைச் சாளர முறையில் 29 நாட்களில் அனுமதி அளிக்கப்படும் இனங்கள் பட்டியலில் அதையும் சேர்த்துவிடுவதாக தெரிவித்தார். இங்கு இயங்கி வரும் தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT