Published : 25 Jan 2018 08:49 AM
Last Updated : 25 Jan 2018 08:49 AM

தினகரன் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு: கரூர் நகராட்சி ஆணையருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

கரூர் நகராட்சி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்த அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில், கரூர் நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் மனு

டிடிவி. தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவையொட்டி கரூர் நகராட்சிக்கு சொந்தமான திருவள்ளுவர் மைதானத்தில் ஜன. 14 முதல் 18 வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், ஜன.18-ல் டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ. பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கேட்டு நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தோம். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. விழா நடத்த அனுமதியளித்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அதே நாளில் வேறொருவர் அனுமதி கோரியிருப்பதால் அனுமதி வழங்க இயலவில்லை என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, ஜன. 27 முதல் 29 வரை விழா நடத்த அனுமதிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

இம்மனுவை பரிசீலித்து ஜன.23-ம் தேதிக்குள் அனுமதியளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவமதிப்பு வழக்கு

இந்நிலையில், செந்தில் பாலாஜி நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பும், விழா நடத்த அனுமதி அளிக்க மறுத்து ஜன.23-ம் தேதி நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. ஆகவே, அனுமதி மறுத்த நகராட்சி ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதோடு, மைதானத்தில் திட்டமிட்டபடி ஜன.27 முதல் 29 வரை விளையாட்டுப்போட்டி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்து இடைக்கால உத்தரவிட வேண்டும்.

அதோடு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இடைக்கால உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் நகராட்சி ஆணையருக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கான நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக் கோரியது தொடர்பாக ஆணையர் பதிலளிக்க இடைக்கால உத்தரவிட்டு வழக்கை ஜன. 31-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x