Published : 05 Dec 2023 12:15 PM
Last Updated : 05 Dec 2023 12:15 PM

மிக்ஜாம் புயல், கனமழையால் புதுச்சேரி - சென்னை பேருந்துகள் நிறுத்தம்

மிக்ஜாம் புயல் காரணமாக புதுச்சேரி கடல் பகுதியில் நேற்று அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. பழைய துறைமுகம் அருகே வழக்கத்தை விட பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக அலை எழும்பியது. படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: மிக்ஜாம் புயல் காரணமாக புதுச்சேரி - சென்னை இடையே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி பகுதியில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளது. ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏரிகள் நிரம்பி வழிகின்றன. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் சின்னம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே இன்றுமுற்பகல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் நெருங்குவதால் புதுச்சேரியில் வானம் இருண்டு,மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

குளிர்ந்த காற்று வீசிவீசுகிறது. புதுவையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்றும் அவ்வப்போது மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் 34.2 மி.மீ என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. புயல் மழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது. தவிர்க்க முடியாமல் பணிக்கு செல்வோர் மட்டுமே சென்றனர். பலத்த காற்றுடன் கனமழை பொழியும் என்ற அறிவிப்பு வெளியான சூழலில், புதுச்சேரியில் கடலில் சீற்றமும் அதிகரித்துள்ளது.

பல அடிகளுக்கு உயரே எழுப்பி,அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. காலாப்பட்டு முதல் புதுக்குப்பம் வரை 15 கிராம மக்கள்மீன் பிடிக்கச் செல்லாததால்விசைப்படகுகள் தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பைபர் படகுகள்,கட்டுமரங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பல மீனவ கிராமங்களில் படகு களை பாதுகாப்பாக ஏற்றி நிறுத்தியுள்ளனர். சென்னை கனமழையால் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு ஈசிஆர், பைபாஸ் வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளை புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் நிறுத்தியுள்ளது. ‘மறு அறிவிப்பு வரும் வரை இந்நிலை தொடரும்’ என்று தெரிவித்துள்ளனர். புதுச்சேரி துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு: புயலால் புதுச்சேரியின் கடலோரக் கரையோரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தைத் தடை செய்ய நேற்று முன்தினம் இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயிரிழப்போ, உடைமைச் சேதமோ ஏற்படாமல் தடுக்கும் வகையில், புதுச்சேரியின் கடலோரக் கரையோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மக்கள் நடமாட்டத்துக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் எந்தவொரு நபரும் 6 மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைதண்டனை அல்லது அபராதம்அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

நிரம்பி வழியும் ஏரிகள்: தொடர் மழை காரணமாக, புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளில் 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிள்ளன. 12 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பி உள்ளதாகவும், 3 ஏரிகள் 25 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும், மீதமுள்ள 17 ஏரிகள் கிடைமட்ட அளவு நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 25 தடுப்பணைகளில் 16 தடுப்பணைகள் முழுவதும் நிரம்பி உள்ளதாகவும், ஒரு தடுப்பணை 50 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும் மற்ற தடுப்பணைகள் 25 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் விடுப்பின்றிபணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பல இடங்களில் விழுந்த மரக்கிளைகள், மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.தீயணைப்புத் துறையினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x