Published : 02 Dec 2023 06:05 AM
Last Updated : 02 Dec 2023 06:05 AM

மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை: மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

மதுரையில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டபோது, அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக போலீஸார். (அடுத்த படம்) அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய அரசின் இந்தோ-திபெத்தியன் படையினர். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: திண்டுக்கல்லில் லஞ்சப் பணத்துடன் அமலாக்கத் துறை அதிகாரி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக, மதுரையில் உள்ள அமலாக்கத் துறை மண்டல உதவி அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மத்திய பாதுகாப்புப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவர்சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கியஅமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி பணியாற்றும் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாகத் துறையின் உதவி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனைமேற்கொண்டனர்.

சோதனைக்கு அனுமதி மறுப்பு: இதையொட்டி, மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில், ஆய்வாளர்கள் ரமேஷ், குமரகுரு, சூரியகலா, பாரதிபிரியா அடங்கிய 20-க்கும் மேற்பட்ட குழுவினர் நேற்று சோதனைக்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரை உள்ளே அனுமதிக்க மறுத்து, தடுத்து நிறுத்தினர். "எதற்காக சோதனை நடத்த வந்துள்ளீர்கள்?" என்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் சிலர், போலீஸாரிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது, "திண்டுக்கல்லில் அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி லஞ்சப் பணத்துடன் சிக்கியுள்ளதால், இங்கு சோதனை நடத்த வந்துள்ளோம்" என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னையில் உள்ள அமலாக்கத் துறைஉயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார், அலுவலகத்துக்கு வந்துள்ள தகவலைத் தெரிவித்தனர். சென்னை உயரதிகாரிகள் சோதனைக்கு அனுமதிக்குமாறு கூறிய பின்னர், அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 4.30 மணிக்கு அந்த அலுவலகத்துக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார், அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரியின் அறையைப் பூட்டிக் கொண்டு, சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 10.30 மணி வரை நீடித்தது. மேலும், அன்கித் திவாரி குறித்து, அங்கிருந்த அமலாக்கத் துறையினரிடம் போலீஸார் பல்வேறு தகவல்களைச் சேகரித்தனர்.

மேலும், மதுரை கோசாகுளம் பகுதியில் உள்ள அன்கித் திவாரியின் வீட்டிலும், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டதால் மதுரையில் பரபரப்பு நிலவியது.

இந்தோ-திபெத்தியன் படை: இந்த சோதனை நடந்துகொண்டிருந்தபோதே, அமலாக்கத் துறை அலுவலகத்தைச் சுற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தோ-திபெத்தியன் படையினரும் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு அதிகமானது.

அன்கித் திவாரியின் அறையில் உள்ள ஆவணங்கள் மற்றும்கணினி, மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்களை ஆய்வு செய்வதற்காக, லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவற்றை எடுத்துச்செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், சோதனை குறித்து தகவலறிந்த மத்திய அரசு வழக்கறிஞர்கள் பலர் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வந்தனர். இந்த சோதனையில், அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்துசில ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும், தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x