Published : 05 Jan 2018 10:08 AM
Last Updated : 05 Jan 2018 10:08 AM

இந்தியா வழங்கிய ஆம்புலன்ஸ்கள் இலங்கை முழுவதும் விரைவில் இயக்கம்: கூடுதலாக 209 வாகனங்களை வழங்க இந்தியா முடிவு

இந்திய அரசு வழங்கிய ஆம்புலன்ஸ்கள் இலங்கை முழுவதும் விரைவில் இயக்கப்பட உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு முதல் முறையாக 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்றார். அப்போது இந்தியாவில் செயல்படும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை இலங்கையிலும் அமல்படுத்த உறுதி அளித்தார்.

அதன்பேரில் இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு ரூ.50.81 கோடி நிதியுதவியும், 88 ஆம்புலன்ஸ் வாகனங்களும் வழங்கப்பட்டன. மேலும் அந்நாட்டு ஊழியர்கள் 600 பேருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2016-ல் டெல்லியில் இருந்து நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இலங்கையில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

இந்த ஆம்புலன்ஸ்கள் முதற்கட்டமாக இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் மட்டும் இலவசமாக இயக்கப்படுகின்றன. இதற்கு அந்நாடு ‘சுவசெரிய’ ஆம்புலன்ஸ் சேவை என பெயரிட்டுள்ளது. ஆம்புலன்ஸ் அழைப்புக்காக 1900 என்ற தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது.

இத்திட்டம் தெற்கு, மேற்கு மாகாண மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சுவசெரிய இலவச ஆம்புலன்ஸ் சேவையை இலங்கை முழுவதும் விரிவுபடுத்த அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்காக இந்தியா சுமார் ரூ.97 கோடி மதிப்பிலான மேலும் 209 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கி 1,300 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலை வகித்தார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இலங்கைக்கான இந்திய தூதர் தரண் ஜித் சிங் சந்து ஆகியோர் கையொப்பமிட்டனர்.

அப்போது, ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது: இரு நாடுகள் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புக்கு ஆம்புலன்ஸ் சேவை சிறந்த உதாரணமாகும். இதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x