Published : 20 Nov 2023 05:35 AM
Last Updated : 20 Nov 2023 05:35 AM

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் - நடத்துநர் பணிக்கான எழுத்து தேர்வு: சென்னை உட்பட 10 இடங்களில் நடந்தது

கோப்புப் படம்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.

2015-ம் ஆண்டுக்குப் பின்னர் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இணையதளம் வாயிலாக செப்.19-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப் பணிகளுக்கு 10,600 பேர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருந்த நிலையில், தகுதி வாய்ந்த 1,600 பேர் குறித்த விவரங்கள் வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் இருந்தும் பெறப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை (அண்ணா பல்கலைக்கழகம்), கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 10 இடங்களில் நேற்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதற்காக, அந்தந்த போக்குவரத்துக் கழக மண்டலங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஏற்கெனவே அறிவித்தபடி, பொதுத்தமிழ், பொது அறிவு மற்றும் தொழில் முறை திறனறிதல் குறித்த வினாக்கள் 100 மதிப்பெண்களுக்கு இடம்பெற்றிருந்தன. நடைமுறைக் கேள்விகள் என்பதால், தேர்வு கடினமாக இல்லை என தேர்வர்கள் தெரிவித்தனர்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, திறன் தேர்வு, நேர்காணல் போன்றவை நடத்தப்பட உள்ளன. இதற்கான தேதிகள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

இதுவரை போக்குவரத்துக் கழகங்களில் நேரடியாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் மட்டுமே ஓட்டுநர், நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், முதன்முறையாக எழுத்துத் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x