Published : 17 Nov 2023 09:11 PM
Last Updated : 17 Nov 2023 09:11 PM

செய்யாறு சிப்காட் விவகாரம்: 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது தமிழக அரசு

அமைச்சர் எ.வ.வேலுவிடம் மனு அளித்த விவசாயிகளின் குடும்பத்தினர்.

சென்னை: செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் முதற்கட்டமாக 645 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்பட்டது. தற்போது, இதில் 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 27,432 நபர்கள் நேரடியாகவும், 75,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதே பகுதியில் இரண்டாம் கட்டமாக 2300 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டது. தற்போது, இதில் 55 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 31,645 நபர்கள் நேரடியாகவும், 1,00,000 நபர்கள் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் ஏதுமில்லாத நிலையில், மேற்குறிப்பிட்ட சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டதன் விளைவாக, செய்யார் மற்றும் வெம்பாக்கம் ஆகிய வட்டங்களை சேர்ந்த அதிக அளவிலான மக்கள் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். குறிப்பாக, பல கிராமங்களைச் சார்ந்த அடித்தட்டு மக்களுக்கும், மகளிருக்கும் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இத்தொழிற்பூங்கா அமைக்கப்பட்டதன் காரணமாக, இப்பகுதியைச் சேர்ந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட சிப்காட் தொழிற்பூங்கா வெற்றிகரமாக செயல்பட்டதன் விளைவாகவும், இப்பகுதியில் சிப்காட் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பெருமளவிலான பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், சிப்காட் பகுதி-3 தொழிற்பூங்காவினை அமைக்கும்பொருட்டு, உரிய ஆணைகள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டன. இதில் செய்யார் வட்டத்தில், மேல்மா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் அளவிற்கு நிலஎடுப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள 3,174 ஏக்கர் பரப்பில், 7 ஏக்கர் மட்டுமே நஞ்சை நிலமாகும்.

தற்போது, 1,200 ஏக்கர் அளவிற்கு நிலஎடுப்பிற்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதில் நஞ்சை நிலம் ஏதுமில்லை. மேலும், அறிவிப்பு கடிதம் அளிக்கப்பட்டதில், நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள, 1881 நில உரிமையாளர்களில், 239 நில உரிமையாளர்கள் மட்டுமே ஆட்சேபணை மனுக்களை அளித்துள்ளனர். சிப்காட் விரிவாக்கத்தின் மூலம் இப்பகுதியில் தொழில் வளர்ச்சி பெருகுவதோடு, அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் உள்ள பட்டா நிலத்தில், தேத்துறை கிராமத்தை சேர்ந்த மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் என்பவர் தலைமையில், தென்னங்கீற்று கொட்டகை அமைத்து, கடந்த 02.07.2023-ஆம் தேதி முதல் தினசரி சுமார் 15 முதல் 20 நபர்களை கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, அடிக்கடி சாலை மறியலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, நில எடுப்பு செய்ய தானாக முன்வந்து சம்மதம் தெரிவித்த பொதுமக்களைத் தடுத்து நிறுத்தியது, பணி செய்த காவலர்களை தாக்கியது, பொது உடமைகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டதன் காரணமாக, கடந்த 04.11.2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மற்றும் 19 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இதில் ஏற்கெனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய, அருள் மற்றும் 6 நபர்களை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். செய்யார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு இந்த நில எடுப்பு வருவதால், குண்டர் சட்டத்தின் கீழ் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் செய்யார் சட்டமன்ற உறுப்பினரை இன்று (17-11-2023) நேரில் சந்தித்து, மேற்படி நபர்களை விடுவிக்க கோரிக்கை வைத்தனர். இன்று மாலை, கைது செய்யப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் செய்யார் சட்டமன்ற உறுப்பினருடன் வந்து, பொதுப்பணித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

இவர்கள் அளித்த மனுக்களில், வருங்காலங்களில் இது போன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், இத்தகைய தவறுகளை வெளியாட்களின் தூண்டுதலின் பேரில் செய்துவிட்டோம் என்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகளைச் செய்யமாட்டோம் என்றும் தெரிவித்து, தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விடுவிக்குமாறும் கோரிக்கை வைத்தனர். பொதுப்பணித் துறை அமைச்சர், கோரிக்கை மனுக்களை முதல்வர் கனிவான கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர், செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு, சட்டம் - ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்து, பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்ததன் காரணமாக, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் குடும்பத்தினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, அவர்களை குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையிலிருந்து விடுவிக்க ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், மேற்குறிப்பிட்டுள்ள 6 நபர்களின் மேல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் தடுப்புச் சட்ட ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை படித்த பிறகுதான் தெரியும்: எ.வ.வேலு - முன்னதாக , “மேல்மா சிப்காட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் குறித்து பத்திரிகையை படித்தபிறகுதான் தெரியவந்தது” என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓர் ஆணி தொழிற்சாலைக் கூட கிடையாது. விவசாயம் நிறைந்த மாவட்டம். நமது கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில், செய்யாறு அருகே சிப்காட் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 622 ஏக்கரில் 13 தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டது. 30 ஆயிரம் இளைஞர்க, பட்டதாரிகள் பணியாற்றி வருகின்றனர். 2-வது கட்டமாக 1,860 ஏக்கரில் 55 நிறுவனங்கள் வர உள்ளது. 1 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள முன்னணி தொழிற்சாலைகளை கொண்டு வர 3-ம் கட்டமாக 1,200 ஏக்கரில் சிப்காட் அமைய உள்ளன. இதில் மேல்மா, தேத்துறை உட்பட 9 கிராமங்கள் உள்ளன. இதையொட்டி அரசின் சார்பில் கருத்து கேட்பு கூட்டம், திட்ட விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டன. 1,881 விவசாயிகளின் நிலம் எடுக்க உள்ளோம். இவர்களில் 239 பேர் மட்டுமே எதிர்க்கின்றனர். சந்தை மதிப்பை விடஇரண்டரை மடங்கு கொடுக்க அரசு முன் வந்துள்ளது.

தொழற்சாலைகள் உருவாக்கினால்தான், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களின் வேலையில்லா திண்டாடத்தை குறைக்க முடியும். வானத்தில், கடலில் தொழிற்சாலைகளை கட்ட முடியாது. மண்ணில்தான் கட்ட முடியும். வெளியூரில் இருந்து வந்தவர்கள், போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த அருள் என்பவர், செய்யாறு சென்று போராட்டம் நடத்துகிறார். 124 நாட்களுக்கு போராட்டம் நடத்தி உள்ளனர். தேவன் என்பவருக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சிப்காட் தொழிற்சாலையில், மேல்மா உட்பட 9 கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பணி செய்கின்றனர். அரசு, எந்த பணியையும் செய்யக்கூடாது, பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடாது என திட்டமிட்டு அரசுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அனைத்தும் தரிசு நிலம்.

விவசாயிகளை வஞ்சிப்பது அரசின் நோக்கம் இல்லை. குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது செய்திருப்பதை, பத்திரிகையை படித்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அமைச்சருக்கு எப்படி தெரியாது என கேட்கலாம். பெரியார் நூற்றாண்டு விழாவுக்காக 2 நாள் சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளேன். குண்டர் சட்டத்தில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும்.

முன்னாள் முதல்வர் பழனிசாமியின் அதிமுக ஆட்சியில் 3-வது சிப்காட் திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர், அவர்கள் செய்யவில்லை, நாங்கள் செய்கிறோம். இதனால் அவர் ஆத்திரப்படுகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அறிக்கை விடுகிறார்” என்று அவர் கூறினார். பின்னர் அவரிடம், குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

மார்க்சிஸ்ட் கண்டனம்: இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசால் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் வேளாண் சாகுபடி செய்யப்பட்டுவரும் நிலம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். நிலத்தை பாதுகாக்க 120 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி 22 பேரை கைது செய்து, தேச துரோக வழக்கு குற்றவாளிகள் போல், பல்வேறு சிறைகளில் அடைத்துள்ளனர். ஆங்கலேயர் ஆட்சிக்கு பிறகு, இத்தகைய நடைமுறை தற்போது நடந்துள்ளது. இவர்களில் 7 பேர் மீது கடந்த15-ம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நிலம் காக்க போராடிய விவசாயிகளை அழைத்து பேசாமல், அடக்குமுறைகளை ஏவுவதை மார்க்சிஸ்ட கட்சி கண்டிக்கிறது. அடக்குமுறைகளை கைவிட்டு, விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து, விடுவிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி: இதேபோல், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட அனைத்து விவசாயிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விளை நிலங்களை பாதுகாக்க போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசின் செயல், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும். விவசாயிகளிடம் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

பின்னணி என்ன? - திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா உட்பட 9 ஊராட்சிகளில் உள்ள 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை, மூன்றாம் கட்ட சிப்காட் விரிவாக்கத்துக்கு கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலத்தில், சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விளை நிலங்களை அழிக்கும் 3-வது சிப்காட் திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, மேல்மா கூட்டுச் சாலையில் பந்தல் அமைத்து 124 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றன.

தொடர் போராட்டத்துக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், ஏற்கெனவே பதிவு செய்த வழங்குகளை ‘தூசு’ தட்டி எடுத்து, 22 பேரை கடந்த 4-ம் தேதி கைது செய்து செய்யாறு காவல் துறையினர் பல்வேறு சிறைகளில் அடைத்தனர். இவர்களில் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் உள்ளிட்ட 7 விவசாயிகளை காவல்துறையினர் கடந்த 15-ம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 7 விவசாயிகள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை கண்டித்து, ஒரு சில வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. இதேபோல், திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை அதிமுக ஆதரவு விவசாயிகள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில், 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x