Published : 17 Nov 2023 06:33 PM
Last Updated : 17 Nov 2023 06:33 PM

“திருச்செந்தூர் கோயில் தரிசன கட்டணக் கொள்ளை” - இந்து முன்னணி எச்சரிக்கை

சென்னை: "மக்களின் கோரிக்கையை ஏற்று, திருச்செந்தூர் கோயிலில் கட்டண தரிசனத்தை ரத்து செய்யாமல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது தமிழகத்தில் மக்கள் விரோத பாசிச ஆட்சி நடைபெற்று வருவதை தெளிவுபடுத்துகிறது. தமிழக அரசின் இந்த அடக்குமுறை ஆணவத்தை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது" என்று அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட ஆட்சியில் கோயிலை பொருட்காட்சி போல் ஆக்கி எங்கும் எதற்கும் கட்டணம் என பகல் கொள்ளையில் வெட்கமின்றி ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஏழை எளிய மக்களை தீண்டத்தகாதவராக நடத்துகிறது இந்து சமய அறநிலையத்துறை. திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் திருக்கோயிலில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பக்தர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பக்தியை பணமாக்கும் இந்த இழிசெயலை பார்த்து தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொந்தளித்துள்ளனர்.

தமிழக அரசின் கட்டணக் கொள்ளையை நிறுத்தக் கோரி நேற்று திருச்செந்தூரில் இந்து முன்னணி மாநில பொறுப்பாளர்கள் வி.பி. ஜெயகுமார், குற்றாலநாதன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் முருக பக்தர்கள் நூற்றுக்கணக்னோர் திரண்டு அறப்போராட்டம் நடத்தினர். அறவழியில் போராடிய பக்தர்கள் மீது காவல் துறை கடுமையான பலபிரயோகத்தை கையாண்டு அச்சுறுத்தி, அடித்து தாக்கியுள்ளது. இதில் சிலர் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மக்களாட்சிக்கு விரோதமான செயல்.

மக்களாட்சி என்பது மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய ஆட்சியாக இருக்க வேண்டும். ஆனால், மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டண தரிசனத்தை ரத்து செய்யாமல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது தமிழகத்தில் மக்கள் விரோத பாசிச ஆட்சி நடைபெற்று வருவதை தெளிவுபடுத்துகிறது. தமிழக அரசின் இந்த அடக்குமுறை ஆணவத்தை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

திருச்செந்தூரில் சஷ்டி திருவிழாவுக்காக உயர்த்தப்பட்டுள்ள கட்டண தரிசனத்தை அனைத்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமல்படுத்தி வசூல் வேட்டை நடத்த உத்திரவிட்டுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். திருச்செந்தூர் கோயிலில் நூறு ரூபாய்க்கு மேல் தரிசன கட்டணம் வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கட்டணம் வசூலிப்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.

நேற்று பக்தர்களிடம் நேரிடையாக பணத்தை வாங்கிக்கொண்டு முறைகேடாக அதிகாரிகள் அனுமதிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது. சினிமா தியேட்டரில்கூட பிளாக்கில் முறைகேடாக டிக்கெட் விற்றால் காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் இத்தகைய கேவலமான செயல் புனிதமான கோயிலில் நடப்பது வெளிவந்தபோதும் காவல்துறை, அரசு அதிகாரிகள் அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய முறைகேடுகளுக்கு இவர்களும் உடந்தையாக இருப்பார்களோ என மக்கள் பேசுகின்றனர்.

ஒவ்வொரு திருவிழாவிலும் இதுபோல் நடப்பதை இந்து முன்னணி எதிர்த்து கண்டித்து வந்துள்ளது. சாமியை காட்சி பொருளாக்கி கட்டணம் வசூலிப்பது, பொருளாதார தீண்டாமை, பக்தர்களை அவமானபடுத்தும் அராஜகத்துக்கு எதிராக பல ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம் நடத்தி, ஆலயத்தில் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிரான மக்கள் கருத்தை உருவாக்கி வருகிறது இந்து முன்னணி. மேலும் சென்ற ஆண்டு திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு பக்தி வேண்டுதலோடு பால்குடம் எடுத்து வந்தவர்களை அவமதித்து பிரகாரங்களில் பாலை கொட்டியதும், வேல் குத்தி காவடி எடுத்து வந்த பக்தரை பிடித்து தள்ளி அநாகரிகமாக நடத்தியதையும் காணொலியில் கண்டது பக்தர்கள் மனதில் ஆறாத வடுவாக இருந்து வருகிறது.

இத்தகைய ஆணவ போக்குக்கு காரணம் பணம் படைத்தவர்களும் அரசியல் அதிகார செல்வாக்கு மிக்கவர்களுக்கும் தான். திருக்கோயில் என்ற மமதையில் தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் செயல்படுவது தான். அதிகார திமிரில் இந்து விரோதமாக செயல்படும் நாத்திக திமுக அரசுக்கு முருகப்பெருமான் தகுந்த பாடம் புகட்டுவார் என்பதை மறக்க வேண்டாம் என எச்சரிக்கிறோம் .எனவே தமிழக அரசு திருவிழா காலங்களில் வரும் பக்தர்களை கனிவுடன் நாகரிமாக நடத்திட தமிழக முதல்வர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்.

மேலும் இந்து சமய அறநிலையத் துறை உயர்த்தி உள்ள கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். எந்த வகையிலும் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கக் கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முருக பக்தர்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களை அற வழியில் இந்து முன்னணி நடத்தும் என எச்சரிக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x