Published : 17 Nov 2023 05:02 AM
Last Updated : 17 Nov 2023 05:02 AM

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, விசாகப்பட்டினத்திலிருந்து 390 கி.மீ. தொலைவிலும், ஒடிசா மாநிலம் பாரதீப்பிலிருந்து 320 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்று வரும் 18-ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்க்லா- கேப்புபாராவுக்கு இடையே கடக்கக் கூடும். அப்போது 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும்வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (நவ. 17) முதல் வரும் 22-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும், வரும் 19-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 20-ம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

பொன்னேரியில் 8 செ.மீ. பதிவு: நவ. 16-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 7 செ.மீ., தக்கலையில் 6 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம்கும்மிடிப்பூண்டியில் 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் 4 செ.மீ., சென்னை ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, சென்னை அண்ணாநகர், சோழிங்கநல்லூர், திரு.வி.க.நகர், கத்திவாக்கம், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, தேனி மாவட்டம் தேக்கடி உள்ளிட்டஇடங்களில் தலா 3 செ.மீ. மழைபதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x