Published : 16 Nov 2023 10:52 PM
Last Updated : 16 Nov 2023 10:52 PM

“திட்டங்களின் பயன்கள் முறையாக பழங்குடியினரை சென்றடையவில்லை” - ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று (நவ.15) தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக இந்த யாத்திரை நாடு முழுவதும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படுகிறது. மத்திய அரசு திட்டங்களின் பயன்கள் பயனாளிகளை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் இந்த யாத்திரை தொடர்பான நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நீலகிரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பகுதியில் இன்று (நவ.16) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்துக்கான வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஜன்தன் வங்கிக்கணக்கு, சமையல் எரிவாயு இணைப்புக்கான உஜ்வாலா திட்டம், பிரதமரின் விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பயன்களை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பழங்குடியினர் நலனில் மத்திய அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். முன்பு பழங்குடியினருக்கான திட்டங்களின் பயன்கள் அவர்களை முறையாக சென்றடையவில்லை என்றும் கடந்த 9 ஆண்டுகளில் அந்த நிலை மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் போது, பழங்குடியின மக்களும் மிக உயர்ந்த நிலையை அடைய “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற நோக்கில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

பழங்குடியினரை கௌரவித்து அவர்களை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர் கூறினார். அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான பிரதமரின் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த இயக்கத்திற்காக 24 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை ஆளுநர் குறிப்பிட்டார். இவை அனைத்தும் பழங்குடியினரை முழுமையாக சென்றடைந்து அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x