Published : 11 Nov 2023 05:51 AM
Last Updated : 11 Nov 2023 05:51 AM

அதிமுக கொடியை பயன்படுத்த தடை: ஓபிஎஸ் மேல்முறையீடு | உயர் நீதிமன்றத்தில் 15-ம் தேதி விசாரணை

சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவரும் நவ.15 அன்று விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த நவ.7அன்று விசாரித்த தனி நீதிபதி,அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நேற்று முன்தினம் நீதிபதிகள் முன்பாக வழக்கறிஞர் பி.ராஜலட்சுமி முறையீடு செய்தார். அதையடுத்து இந்த மனுவை பட்டியலிடும் நடைமுறைகள் முடிந்தால் நவ.10 (நேற்று) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக்ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வரவில்லை, அதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன், இந்த வழக்கை இன்றே (நேற்று) அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரினார். அதற்கு நீதிபதிகள், முறையீடுசெய்த அன்றே மனு தாக்கல் செய்யாத நிலையில் எப்படி இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியும் என்றனர். பின்னர்இந்த மனு வரும் நவ.15 அன்றுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x