Published : 09 Nov 2023 05:18 PM
Last Updated : 09 Nov 2023 05:18 PM

ஐடி, அமலாக்கத் துறை ‘மத்திய அரசு ஏஜென்சி’ என்றால் தமிழக காவல் துறை யாருடைய ஏஜென்சி? - ஐகோர்ட் கேள்வி

சென்னை: “வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம் சாட்டும்போது, தமிழக காவல் துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்?” என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “பாமகவின் மது ஒழிப்பு உள்ளிட்ட கொள்கைகள் குறித்து பிரச்சாரம் செய்ய மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த அனுமதி கோரி ராணிப்பேட்டை காவல் துறையினரிடம் மனு அளித்தேன். மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, எனது மனுவை பரிசீலித்து பேரணிக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “மாரத்தான் ஓடுவதற்கும், நடப்பதற்கும் அனுமதி வழங்கும் போது, மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? ஆளுங்கட்சியினருக்கு மட்டும் தான் காவல் துறையினர் அனுமதி வழங்குவார்களா?” என்று கேள்வி எழுப்பினார். “காவல் துறையினர் யாருக்காக உள்ளனர்? பொது மக்களுக்காகவா? ஆளுங்கட்சியினருக்காகவா?” எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி, வருமான வரித் துறை, “அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம்சாட்டும் போது, தமிழக காவல் துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

பின்னர், ராணிப்பேட்டையில் கடந்த மாதம் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்த வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டார். ஒருவேளை யாருக்காவது அனுமதி வழங்கியிருந்தால் டிஎஸ்பி நேரில் ஆஜராகி சொல்லி விளக்கம் கேட்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, விசாரணையை 17-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x