Published : 08 Nov 2023 05:03 AM
Last Updated : 08 Nov 2023 05:03 AM

விடுபட்ட 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு நவ.10-ம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: அதிகாரிகள் தீவிரம்

கோப்புப் படம்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனாளிகளாக இணைய விண்ணப்பித்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வரும் 10-ம் தேதியே ரூ.1,000 உரிமை தொகையை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்.15-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்ட 1.68 கோடி விண்ணப்பங்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டனர். கடந்த செப்.14, 15-ம் தேதிகளில் வங்கிக் கணக்கு, மணி ஆர்டர் மூலமாக அவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது.

இதையடுத்து, இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் புதிதாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கும் அக்.14-ம் தேதியே ரூ.1,000 விடுவிக்கப்பட்டது. அதேநேரம், உயிரிழந்தவர்கள், தகுதி இல்லாதவர்கள் என கண்டறியப்பட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

இதற்கிடையே, தகுதி இருந்தும் தங்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகளிடம் பெண்கள் முறையிட்டனர். பல்வேறு இடங்களுக்கு முதல்வர் சென்றபோதும், அவரிடமும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, விடுபட்டவர்கள், தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 11.85 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடந்த வாரம் பரிசீலிக்கப்பட்டன. இந்த விண்ணப்பங்களில் தகுதியான மகளிருக்கு, அதற்கான குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) தற்போது அனுப்பப்பட்டு வருகிறது. அத்துடன், அவர்களது வங்கிக் கணக்குக்கு ரூ.1 அனுப்பி சரிபார்க்கப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை நவ.12-ம் தேதி வருவதால், அதற்கு முன்பாகவே ரூ.1,000 உரிமை தொகையை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, ஏற்கெனவே உள்ள பயனாளிகள் மற்றும் புதிதாக சேர்க்கப்படும் பயனாளிகளுக்கு வரும் 10-ம் தேதியே மகளிர் உரிமை தொகை ரூ.1,000 விடுவிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x