Published : 03 Nov 2023 02:47 PM
Last Updated : 03 Nov 2023 02:47 PM

ஓலைச்சுவடிகளைக் காப்பாற்றுவது ஏன்? - பிரதமரின் ஊடகப் பிரிவு இணை இயக்குநர் அருண்குமார் விளக்கம்

எணணிமப் பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றது.

சென்னை: "ஓலைச்சுவடிகளைக் காப்பாற்றுவது அதில் உள்ள எழுத்துக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல. நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் அறிவைப் காப்பாற்றுவதற்காக" என்று பிரதமரின் ஊடகப் பிரிவு மற்றும் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு இணை இயக்குநர் அருண்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகாகவி பாரதியாரின் புகழைப் பறைசாற்றும் வகையில் அவர் பிறந்த நாளான டிசம்பர் 11 – ம் நாளை 2022-ம் ஆண்டு முதல் ‘பாரத மொழிகளின் நாள்’ என்று இந்திய அரசு கொண்டாடி வருகின்றது. இந்த நாளை முன்னிட்டு ‘இந்திய மொழிகளின் வேற்றுமையில் ஒற்றுமை’யை எதிர்கால இளைஞர்களின் மனங்களில் மேலோங்க செய்வதற்காக பாரத மொழிகளின் திருவிழாவினைக் கொண்டாடி வருகின்றது. இதனையே ‘பன்மொழியியம்’ (multilinguialism) என்று மத்திய அரசு புதிதாக வகுத்தளித்துள்ள கல்விக் கொள்கையில் இடம்பெறச் செய்துள்ளது. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் உயர்ந்த குறிக்கோளினை இந்திய மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான புதிய முயற்சியாகப் ‘பாரத மொழிகளின் திருவிழா’வானது ‘மொழிகள் பல; உணர்வு ஒன்றே’ எனும் முழக்கத்துடன் 2023 செப்டம்பர் 28 முதல் 11 டிசம்பர் 2023 ஆம் நாள் வரை கொண்டாடப்படுகிறது.

எண்ணிமப் பாதுகாப்பு நாள்: எண்ணிமப் பாதுகாப்பு தினமானது ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் வியாழக்கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. எண்ணிமப் பாதுகாப்பு என்பது (Digital Preservation) வணிகம், கொள்கை வகுப்பு ஒழுகலாறுகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் இரண்டறக் கலந்துள்ளது எனலாம்.

இன்றைய கணினி யுகத்தை வரையறுக்கும் எண்ணிமத் தொழில்நுட்பங்கள் பரவலான எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற தொடர்ச்சியாக மாற்றமடையும் அம்சங்களாக அமைந்துள்ளன. மருத்துவம், விஞ்ஞானம், சட்டம் போன்ற துறைகள் மட்டுமன்றி ஆய்வுகள், நூலகம், கைத்தொழில், அரசியல் முதலான அனைத்துத் துறைகளிலும் எண்ணிமச் சாதனங்கள் இன்றியமையாத பங்குவகிக்கின்றன. பண்பாட்டு மரபுரிமையும், ஊடகச் செயல்பாடுகளும் கூட எண்ணிமச் சாதனங்களிலேயே தங்கியிருக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிமப் பாதுகாப்பு குறித்த ஒருநாள் கருத்தரங்கினை நவ.2ம் தேதியன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தியது.

இவ்விழாவில் பிரதமரின் ஊடகப் பிரிவு, ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு இணை இயக்குநர் அருண்குமார் தனது உரையில் கூறியதாவது: "கடந்தகால வரலாறு மற்றும் இலக்கியங்களை எதிர்கால சந்ததிகளுக்கு எடுத்துச் செல்ல அவற்றைப் பாதுகாக்க வேண்டும். நம் வரலாறு, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகளில் கிடைக்கின்றன. அதில் கல்வெட்டுகள், செப்பேடுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை.

ஓலைச்சுவடிகள் மூலிகைப் பூச்சு செய்து பாதுகாத்தாலும் 200 வருடம் வரை மட்டுமே வரும். அதன்பிறகு படி எடுக்க வேண்டும். அதனால் தான் printing press கண்டுபிடிப்பை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்றார்கள். அது படி எடுப்பதை எளிதாக்கிவிட்டது. அதனால் நூல்களை நிறையபேரிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும். ஆறுமுக நாவலர், சி. வை தாமோதரம்பிள்ளை போன்றோர் ஓலைச்சுவடிகளை அச்சில் ஏற்றி அழிவில் இருந்து காப்பாற்றினார்கள்.ஓலைச்சுவடிகளைக் காப்பாற்றுவது அதில் உள்ள எழுத்துக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல. நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் அறிவைப் காப்பாற்றுவதற்காக.

சங்க இலக்கியங்களில் அடம்பப்பூ பற்றிய குறிப்பு உள்ளது. அதில் அதை வெட்டி வெயிலில் உழுது போட்டால் soil salinization சரி செய்யலாம் என்று இருக்கிறது. டெல்டா மாவட்ட மண்ணில் இந்த பிரச்சினை உள்ளது. கடற்கரை ஓரங்களில் அடம்பப்பூ களையாக உள்ளது. முன்னோர்களின் இந்த அறிவைக் காக்க நாம் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும். இப்போது கணிப்பிறி வந்ததால் எண்மிய முறை மூலம் பாதுகாப்பது எளிதாகிவிட்டது. எண்மிய முறைப்படி பாதுகாப்பதால் ஓலைச்சுவடிகளைப் படிக்க, தொடத் தேவையில்லை. நிறைய பேர் சேர்ந்து ஒரு நூலில் வேலை செய்ய முடியும். மொழிபெயர்ப்பு வழங்க முடியும். பிற மொழி பேசுபவரும் அந்த நூலைப் பற்றி அறிந்து அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முடியும். அந்தவகையில் பேராசிரியர் இயக்குநர் இரா. சந்திரசேகரன் திருக்குறளைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வருவது பாராட்டத்தக்கது.

எண்மிய முறைப்படி பாதுகாப்பதன் பயனாகப் பல நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் ஆராய்ச்சியாளர்களும் படிக்க முடியும். நேரில் வரத் தேவையில்லை. அந்த வகையில் சில புலனக் குழுக்களில் வெளிநாடு வாழ் தமிழர்கள் அவர்கள் ஊரில் உள்ள தமிழ்க் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளைப் படமெடுத்து இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களை வைத்து கல்வெட்டில் உள்ளதைக் கட்டுடைக்கின்றனர். எடுத்துக்காட்டாக சீனாவில் உள்ள கானீசுவரம் கோயிலைக் குறிப்பிடலாம்.

எண்மிய முறைப்படி பாதுகாப்பதில் உள்ள சவால்கள்: எந்த ஊடகத்தில் பாதுகாக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்தல். இருபது வருடங்களுக்கு முன்பு என்றால் ஃபிளாப்பியில் (floppy disk) தான் பாதுகாப்போம். இப்போது அது வழக்கொழிந்துவிட்டது. அப்போது Gold CDல் நகல் எடுக்க வேண்டும். நகல் எடுக்கும் போது சில தரவுகள் (data loss) இடம்பெறாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு.

இப்போது ssd இருக்கிறது. அதில் பாதுகாக்கக் கூடாது. ஏனென்றால் அது எளிதில் எழுத, திருத்த தரவுகளை வெளிக்கொண்டு வருவதற்குச் செய்யப்பட்ட ஊடகம். அதில் பாதுகாத்தால் பல வருடங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் தரவுகள் கரைந்து போய்விடும் நிலை ஏற்படும். அதனால் persistent medium என்று சொல்லப்படும் ஊடகத்தில் தான் பாதுகாக்க வேண்டும். அடுத்து எந்த software எந்த format-ஐ பயன்படுத்தி சேமிப்பது. முடிந்த வரை open source software-ஐ பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் propriety software செய்யும் கம்பெனி இன்று இருக்கும் நாளை இருக்குமா சொல்ல முடியாது. Open source-ஐ நிறையபேர் சேர்ந்து செய்வதால் நிறைய வருடம் ஆதரவு கிடைக்கும்.

எந்த format எதற்கு கண்டுபித்தார்கள் என்று அறிந்து அதைப் பொறுத்து பயன்படுத்த வேண்டும். Jpg படத்தின் file அளவு குறைவாக இருக்க வேண்டும் data loss இருக்கலாம். ஆனால், தெரியக் கூடாது என்று எண்ணி கண்டுபிடித்தது. தரவுகள் ஒரு முறை இழந்தால் அதை மீட்க முடியாது. அதனால் lossless formatல் தான் சேமிக்க வேண்டும். அப்படிச் செய்தால் file அளவு கூடும். அதனால் செலவு அதிகம் ஆகும். அதனால் எவ்வளவு budget உள்ளது என்பதைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். ஓலைச்சுவடிகளில் படி எடுப்பது போல எண்மிய முறையிலும் சில வருடங்களுக்குப் பிறகு படி எடுக்க வேண்டும். இல்லை என்றால் தரவுகள் கரைந்து போகும்.

சில வருடங்கள் கழித்துப் படி எடுக்கும்போது medium / software / format மாறி இருக்கலாம். அப்போது அதையும் மாற்ற வேண்டும். Format / software மாற்றும் போது data loss வரும். அதனால் எப்படி மாற்றினால் குறைந்த data loss வரும் என்று பார்க்க வேண்டும். கடைசியாக மூலத்தையும் (original) பாதுகாக்க வேண்டும். PIBல் 1940ல் தொடங்கி பழைய போட்டோக்களை Albumகளிலும் Negatives-ஐயும் பாதுகாத்து வருகிறோம். அதை எண்மியப்படுத்தி அதையும் பாதுகாக்கிறோம். NFAIல் இந்தியாவில் முதன் முதலில் எடுத்த திரைப்படம் போன்ற அரிய படங்களின் reelகளை cryogenic முறையில் பாதுகாக்கிறார்கள்" என்றார். இதன் தொடக்க விழாவில் நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தலைமையுரையாற்றினார். பதிவாளர் ரெ. புவனேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார். த. செந்தில்குமார் வரவேற்புரை வழங்க இளநிலை ஆராய்ச்சி அலுவலர் முனைவர் சி. ராமச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து எண்ணிமப் பாதுகாப்பு நாள் விழாவின் முதல் அமர்வில் ‘எண்ணிமப் பாதுகாப்பு’ என்னும் தலைப்பில் அருண்குமார் உரையாற்றினார். இரண்டாவது அமர்வில் ‘அன்றாட வாழ்வில் தரவுகள் பாதுகாப்பு’ என்னும் தலைப்பில் வி.கே. தீரஜ் உரையாற்றினார். மூன்றாம் அமர்வில் ‘தரவுப் பாதுகாப்பு உத்திகளும் கொள்கைகளும் செயல்படுத்தும் முறைகளும்’ என்னும் தலைப்பில் இரா. பாலசுந்தரம் உரையாற்றினார். நான்காம் அமர்வில் ‘தரவுத்தள நிர்வாகம்’ என்னும் தலைப்பில் திரு. பா. பிரபாகரன் உரையாற்றினார், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x