நகரத்தார் சமூக முதல் அருங்காட்சியகம்: செட்டிநாட்டு கலைநயப் பொருட்களை கண்டு ரசிக்கலாம்!

நகர வைரவன்பட்டியில் அமைந்துள்ள செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்.
நகர வைரவன்பட்டியில் அமைந்துள்ள செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்.
Updated on
3 min read

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டியில் நகரத்தார் சமூகத்துக்காக முதன் முறையாக அமைக்கப்பட்ட அருங்காட்சி யகத்தில் செட்டிநாட்டின் கலைநயமிக்க பாரம்பரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

சோழநாட்டின் காவிரி பூம்பட்டினத்தை பூர்வீ கமாக கொண்ட நகரத்தார் சில காரணங்களால் பாண்டிய நாட்டில் குடியேறினர். முதலில் 96 ஊர்களில் வசித்த அவர்கள், தற்போது 76 ஊர்களில் மட்டுமே உள்ளனர். இதில் சிவகங்கை மாவட்டத்தில் 56 ஊர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஊர்கள் உள்ளன. அவர்கள் வசிக்கும் ஊர்களை செட்டிநாட்டு பகுதி என்று அழைக்கின்றனர். செட்டிநாடு வீடு, சமையல், உறவுமுறை என அனைத்திலும் தனித்துவமாக இருந்து வருகின்றனர். அவர்கள் பன்னெடுங்காலமாக பயன்படுத்திய பொருட்களை தொகுத்து முதன்முறையாக நகர வைரவன்பட்டியில் செட்டியார் பாரம்பரிய அருங் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

நகரத்தார் சமூகத்தினர் பயன்படுத்திய பனை ஓலை பெட்டிகள்
நகரத்தார் சமூகத்தினர் பயன்படுத்திய பனை ஓலை பெட்டிகள்

கடந்த 2022 மே 8-ம் தேதி திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் 4,000 சதுர அடியில் செட்டிநாடு கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் மூன்று தளங்களாக உள்ளன. இங்கு பழமையான ஓலைச்சுவடிகள், முதன்முறையாக தனி நபருக்காக 1948-ம் ஆண்டு வெளியிடப்பட்ட காந்தியடிகள் தபால் தலை, பழங் காலங்களில் நகரத்தார் 50 பவுன் முதல் 100 பவுன் எடையுள்ள கழுத்துறு என்று அழைக்கப்படும் தாலியை பயன்படுத்துவர். அந்த தாலி இடம் பெற்றுள்ளது. 1917-ம் ஆண்டு முதல் பயன்படுத்திய வரவு, செலவு நோட்டுகள், செட்டிநாடு வீடுகள், கோயில்களின் புகைப்படங்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் லண்டனில் அச்சிடப்பட்டு இந்தியன் ரயில்வேயால் 1938-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘ஹேண்ட் புக் ஆப் இந்தியா’ புத்தகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

நகரத்தார் பயன்படுத்திய நூறாண்டு பழமையான பாத்திரங்கள்.
நகரத்தார் பயன்படுத்திய நூறாண்டு பழமையான பாத்திரங்கள்.

இதில் இந்தியாவில் உள்ள சுற்றுலாத்தலங்கள் இடம் பெற்றுள்ளன. யானை சாணத்தால் செய்யப் பட்ட யானை உருவம், புவிசார் குறியீடு பெற்ற கொட்டான்களில் 100 ஆண்டுகள் பழமையானவை உள்ளன. இதுதவிர அஞ்சறைப்பெட்டி, பிரம்மாண்ட இட்லி சட்டி, அண்டா, தூக்குச்சட்டி, ஜெர்மன் பாத்திரங்கள், ஜப்பான் கண்ணாடி பாத்திரங்கள், பழமையான ஊறுகாய் ஜாடி, நகரத்தார் சீர் வரிசைப் பொருட்கள், கலைப் பொருட்கள், திருமண பத்திரிகைகள், பழைய முத்திரைத் தாள்கள், கடிதங்கள், மண்பாண்டப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், பழமையான நாண யங்கள் போன்றவை உள்ளன.

நகரத்தார் வரலாறு மற்றும் வாழ்வியல் தொடர்பான நூல்கள் கொண்ட நூலகமும் உள்ளது. அதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடங்கியதில் இருந்து வெளியான நாளிதழ்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை செட்டிநாடு பகுதிக்கு சுற்றுலா வருவோர் அனைவரும் கண்டு ரசித்து வருகின்றனர். அருங்காட்சியகம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து நாட்க ளும் திறந்திருக்கும். ரூ.25 கட்டணமாக வசூலிக் கப்படுகிறது. தொடர்புக்கு 99446 66683.

எஸ்.எல்.எஸ்.பழனியப்பன்
எஸ்.எல்.எஸ்.பழனியப்பன்

இதுகுறித்து அருங்காட்சியகம் உரிமையாளர் கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் கூறியதாவது: நகரத்தாரின் அக்கால பழக்கவழக்கங்களை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்காக இந்த அருங் காட்சியகத்தை அமைத்தோம். இதை சொந்த செலவில் ரூ.80 லட்சத்தில் கட்டினோம். இங்குள்ள பெரும்பாலான பொருட்கள் எங்களது முன்னோர்களுடையது. எங் கள் பாட்டனார் கம்பளை சாத்தப்ப செட்டி யார் பெரும் வணிகர். இலங்கையில் அரசுக்கு நிகராக வங்கி நடத்தி வந்தவர். அங்கு கிடைக்கும் வெளிநாட்டு பொருட்களை வாங்கி வருவார். அதேபோல் எங்களது தாத்தா, தந்தை, சித்தப்பா ஆகியோரும் இலங்கையில் இருந்தனர். நான்கு தலைமுறை சேகரித்த அரிய வகை பொருட்கள் வீட்டில் முடங்கி கிடந்தன. அவற்றை காட்சிப் படுத்தினேன்.

செட்டியார் சமூகத்தினர் அணிந்த நூறு பவுன் எடையிலான தாலி.
செட்டியார் சமூகத்தினர் அணிந்த நூறு பவுன் எடையிலான தாலி.

நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கு மூன்று உரிமைகளை சோழ மன்னர்கள் வழங்கினர். மன்னர்களுக்கு முடிசூட்டும் உரிமை, வீடுகளில் சிங்கக்கொடி பறக்கவிடுதல், வீட்டின் உச்சியில் அரண்மனை போன்று தங்கக்கலசம் வைத்திருத்தல். இதில் மன்னர்களுக்கு முடிசூட்டுவது தொடர்பான புகைபடங்கள், சிங்கக்கொடி, அருங்காட்சியகம் உச்சியில் தங்கக்கலசம் ஆகிய மூன்றும் இடம் பெற்றுள்ளன. என்னுடைய முயற்சிக்கு எனது மனைவி மாலதி, மகன் சாத்தப்பன் உதவியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in