Published : 02 Nov 2023 05:07 AM
Last Updated : 02 Nov 2023 05:07 AM

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்: உள்துறை செயலர், டிஜிபி, 3 மாவட்ட எஸ்.பி.க்கள் ஆஜராக உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்காததால் ஆர்எஸ்எஸ் சார்பில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறை செயலர், டிஜிபி, ஆவடி மாநகர காவல் ஆணையர் மற்றும் 3 மாவட்ட எஸ்.பி.க்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் 76-வது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் முக்கிய தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அக்.22, 29-ம் தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

காவல் துறைக்கு உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு கடந்த அக்.16-ம்தேதி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி தராததால், காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன், ஜி.கார்த்திகேயன், வழக்கறிஞர் ரபு மனோகர் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் எந்தவொரு தடையும் விதிக்கவில்லை. எனவே, இந்த அவமதிப்பு வழக்கில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று வாதிட்டனர்.

காவல் துறை தரப்பில் ஆஜரானகூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், ‘‘ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துதமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். அந்த வழக்கு நவ.3-ம் தேதி விசாரணைக்கு வருகிறது’’ என்றார்.

இதையடுத்து, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்க உத்தரவிட்டும், போலீஸார் அனுமதி அளிக்காதது, அரசின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது. நீதிமன்றம் என்னதான் உத்தரவு பிறப்பித்தாலும், அதற்கு போலீஸார் மதிப்பளிக்க விரும்பவில்லை.

இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலர், தமிழக டிஜிபி, ஆவடி மாநகரகாவல் ஆணையர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் 4 வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x