Published : 02 Nov 2023 01:28 AM
Last Updated : 02 Nov 2023 01:28 AM

“அன்று வான்கடேவில் ரசிகன்.. பின்னாளில் சாம்பியன்” - தனது சிலை திறப்பு விழாவில் சச்சின் நெகிழ்ச்சி

சிலை திறப்பு விழாவில் சச்சின்

மும்பை: வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதில் சச்சின் பங்கேற்றார். அப்போது தனது வான்கடே மைதான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

சச்சினை கவுரவிக்கும் வகையில் வான்கடே மைதானத்தில் அவரது முழு உருவச்சிலை அமைக்கப்படும் என மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது வான்கடே மைதானத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் 1989 முதல் 2013 வரை சச்சின் விளையாடி உள்ளார். சுமார் 24 ஆண்டுகள். 1989, நவம்பர் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்ஸை பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் அவர் விளையாடி இருந்தார். கடந்த 2013 நவம்பரில் தனது சொந்த ஊரான மும்பை மண்ணில், வான்கடே மைதானத்தில் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ என கிரிக்கெட் உலகில் அறியப்படுபவர். மொத்தம் 100 சதங்களை சர்வதேச கிரிக்கெட் உலகில் பதிவு செய்துள்ளார்.

“1983-ல் தான் முதன்முதலாக நான் வான்கடே மைதானத்துக்கு வந்தேன். அப்போது எனக்கு 10 வயது. இந்தியா உலகக் கோப்பையை வென்ற பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடிய தொடர் அது. எனது சகோதரரின் நண்பர்கள் போட்டியை பார்க்க முடிவு செய்தார்கள். அவர்களுடன் நானும் வந்திருந்தேன். நார்த் ஸ்டேண்டில் இருந்து போட்டியை பார்த்து ரசித்தேன்.

பின்னர் 1987 உலகக் கோப்பை தொடரின் போது நான் பால்-பாயாக தேர்வானேன். அப்போது இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது எனக்கு 14 வயது. சுனில் கவாஸ்கர் என்னை ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு அழைத்து சென்றார்.

இந்த மைதானத்தில் எனது மகிழ்ச்சிகரமான தருணம் என்றால் அது 2011 உலகக் கோப்பை வெற்றி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்வில் மிக மகிழ்வான தருணம் அது.

2013-ல் எனது கடைசி கிரிக்கெட் போட்டியை இங்கு தான் விளையாடினேன். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி அது. நான் பேட் செய்ய வந்தபோது எனது அம்மா மற்றும் குடும்ப உறுப்பினர்களை மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ஒளிபரப்பு செய்தார்கள். அதை பார்த்த நான் ஆட்டத்தில் எனது கவனத்தை செலுத்த முடியாமல் தவித்தேன். வான்கடேவில் இந்த நினைவுகளை எண்ணி பார்த்தால் இயல்பாகவே முகத்தில் புன்னகை மலர்கிறது” என சச்சின் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x