Last Updated : 01 Nov, 2023 04:04 AM

 

Published : 01 Nov 2023 04:04 AM
Last Updated : 01 Nov 2023 04:04 AM

புதுச்சேரி உள்துறை அமைச்சருக்கு‘வளர்ச்சி முதல்வர்’ என வரவேற்பு பதாகை - என்.ஆர். காங். கட்சியினர் அதிருப்தி

காரைக்காலில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயத்தை ‘வளர்ச்சி முதல்வர்’ எனக் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகை.

காரைக்கால்: காரைக்காலில் இன்று (நவ.1) நடைபெறும் புதுச்சேரி விடுதலை நாள் விழாவுக்கு, வருகை தரும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயத்தை வரவேற்கும் விதமாக அவரது ஆதரவாளர்களால் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் ‘வளர்ச்சி முதல்வர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக ஆளும் என்.ஆர்.காங் கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகட்சியான பாஜக இடையே பனிப் போர் நிலவி வருகிறது. இந்நிலையில், காரைக்காலில் இன்று (நவ.1) நடைபெறும் புதுச்சேரி விடுதலை நாள் விழாவில், பாஜகவைச் சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார்.

அவரை வரவேற்கும் விதமாக, மாவட்ட எல்லையில் இருந்து காரைக்கால் நகரம் வரை அமைச்சரின் ஆதரவா ளர்களால் வைக்கப் பட்டுள்ள பல வரவேற்பு பதாகைகளில், ‘வளர்ச்சி முதல்வர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சியினரி டையே பேசு பொருளாகியுள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் டிஜிட்டல் போர்டுகள் வைப்பதற்கு தடையுள்ள நிலையில், மிக அதிகளவில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதும் விமர்சனத்துக் குள்ளாகியுள்ளது.

இது குறித்து காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.டி.அன்சாரி பாபு: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: கூட்டணி அரசில் உள்ள அமைச்சரை ‘வளர்ச்சி முதல்வர்’ என்று குறிப்பிட்டுள்ளது கூட்டணிக்கு உகந்தது அல்ல என்றாலும் கூட, பொது மக்களாலும் இதை ஏற்க முடியாது. மேலும், டிஜிட்டல் போர்டுகள் வைக்க தடை உள்ள நிலையில், மாவட்டத்தில் போர்டுகள் வைத்திருப்பது சட்டமீறல் ஆகும்.

இது குறித்து எங்கள் அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளோம் என்றார். முதல்வராக என்.ரங்க சாமி பதவி வகிக்கும் நிலையில், அமைச்சரை ‘வளர்ச்சி முதல்வர்’ என்று குறிப்பிட்டு அவரின் ஆதரவாளர்கள் பதாகைகள் வைத்திருப்பது வேதனையளிப்பதாக உள்ளது என என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கூறினர்.

முதல் முறையாக....: புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்கள் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்து 1954-ம்ஆண்டு நவ.1-ம் தேதி இந்தியாவுடன் இணைந்தன. 2014-ம் ஆண்டு முதல் இந்த நாள் (நவ.1)புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்போது முதல் கடந்த ஆண்டு வரை, அமைச்சர்களாக இருந்த காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த சந்திரகாசு, கமலக் கண்ணன், சந்திர காசுவின் மகளான சந்திர பிரியங்கா ஆகியோர் காரைக்காலில் தேசியக் கொடியேற்றி வைத்தனர். தற்போது சந்திர பிரியங்கா அமைச்சர் பதவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதால், அமைச்சரவையில் காரைக்காலுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளது.

இந்நிலையில், காரைக்கால் பிராந்தியத்தைச் சேராத அமைச்சர் ஒருவர் (ஏ.நமச்சி வாயம்) முதல் முறையாக தேசிய கொடியேற்றி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x