Published : 30 Oct 2023 02:43 PM
Last Updated : 30 Oct 2023 02:43 PM

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் | கோப்புப் படம்

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்தியே தீருவோம் என்று ஆர்எஸ்எஸ் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக அண்மையில் அந்த அமைப்பின் வட தமிழக தலைவர் குமாரசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் காவல் துறையினர் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தியும், ஒரு சில மாவட்டங்களில் விண்ணப்பங்களை நிராகரிக்கவும் செய்தனர். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அனுமதியை நிகழ்ச்சி நடப்பதற்கு 5 தினங்களுக்கு முன்பே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், காவல் துறையினர் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கடிதத்தை வழங்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்’’ என அறிக்கை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி அக்டோபர் 16-ஆம் தேதி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதிக்கவில்லை என்பதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் ரபு மனோகர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

இந்த அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய தேதிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி, மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரணைக்கு பட்டியலிட்ட பின்னர் விசாரிக்கப்படும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x