

புதுச்சேரி: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் அமைச்சர்கள், எம்.பி பங்கேற்றது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. பொதுக்கூட்டத்தில் பேரவைத் தலைவர் பங்கேற்றது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. இனிவரும் காலங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களுக்கு முதல்வர் ரங்கசாமி தடை விதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் நேற்று ஆர்எஸ்எஸ் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான சிவா இன்று வெளியிட்ட அறிக்கையில்,"இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் சிதைக்க பாடுபடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், பேரவைத் தலைவரும் கலந்து கொண்டது மரபுகளை மீறும் செயலாகும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 99-வது ஆண்டு துவக்க நாளையொட்டி, இவர்களின் சித்தாந்தங்களுக்கு எதிராக சமத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் போதித்த காந்தியடிகள், வள்ளலார், அண்ணல் அம்பேத்கார் பெயரில் புதுச்சேரி மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்அணிவகுப்பு ஊர்வலம் நடத்தியிருப்பது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் செயல்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை ஆட்சி அதிகார பலத்தினால் அனைத்து மத மக்களுடன் ஒற்றுமையாக வாழும் புதுச்சேரி மண்ணில் நடத்தி மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வினை ஊட்டியுள்ளனர்.
புதுவை மக்களின் கலாச்சாரத்திற்கும், பன்முகத்தன்மைக்கும் துளியும் ஒவ்வாத ஒரு ஊர்வலத்தை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலும், மாநிலங்களவை எம்பி செல்வகணபதி கொடியசைத்து துவக்கி வைத்ததும், ஊர்வலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் சாய் சரவணக்குமார் கலந்து கொண்டிருப்பதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக புதுச்சேரி சட்டமன்றத்தின் மாண்புகளையும் மரபுகளையும் பாதுகாக்க வேண்டிய பேரவைத்தலைவர் செல்வம் இந்த ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்தில் முன் வரிசையில் அமர்ந்து கலந்து கொண்டிருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கே எதிரானதாகும்.
இதனை முதல்வர் ரங்கசாமி கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் இது போன்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது, சட்டம் – ஒழுங்கில் பிரச்சினை ஏற்பட்டுவிடக்கூடாது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் எங்கள் இந்தியா கூட்டணி கவனமாக செயல்படுகிறோம். ஆனால் வேண்டுமென்றே பிரச்சனைகளை புதுச்சேரியில்
உருவாக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது.
இவர்களின் பிரிவினைவாத கனவுகள் ஒருபோதும் நிறைவேறாது. அமைதிப் பூங்காவாக திகழும் புதுச்சேரி மாநிலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் அவரை முன்னிறுத்தி அரசியல் செய்து, கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத கொள்கைகளையும் முகமூடிகளையும் மக்கள் உற்று நோக்கி வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான பதிலை மக்கள் நிச்சயம் சொல்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.