Published : 29 Oct 2023 04:09 AM
Last Updated : 29 Oct 2023 04:09 AM

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் 2 மண்டபம் அமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்த ரூ.1.55 கோடியில் இரண்டு மண்டபங்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில், 1908-ம்ஆண்டு அக்டோபர் 30-ம் நாள் பிறந்தார். பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருந்தாலும், அன்னிய நாட்டினால் அடிமைப்பட்டிருந்த அடித்தள மக்களின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருந்ததைக் கண்ணுற்ற அவர், அம்மக்களின் வாழ்வு மேம்பட தன்னையே அர்ப்பணித்தார். ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்துக்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையைத் திரட்டிஅனுப்பிய பெருமை அவரையே சாரும். 1920-ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்துக்கு எதிராக முதன்முதலில் போராடி அச்சட்டத்தை அகற்றியவர் முத்துராமலிங்க தேவர்.

தேர்தலில் வென்றவர்: 1939-ம் ஆண்டு ஜூன் 22-ம் நாள் அகில இந்திய பார்வர்டு கட்சியை நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூடன் இணைந்து செயல்படல், 1952-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி என பல்வேறு உச்சங்களைத் தொட்டவர் முத்துராமலிங்க தேவர். ‘வங்கத்தில் நேதாஜி, தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்’ என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் போற்றப்பட்டவர். இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்ட விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழக அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம்நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

திறந்தவெளியில் காத்திருப்பு: இவ்விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். நினைவிடத்தின் முன் ஒரு சிறிய இடத்தில், குறுகிய நேரத்தில் அதிக கூட்டம் கூடுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் திறந்த வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வெயில் மற்றும் மழையில் இருந்து அவர்களைப் பாதுகாத்திடவும், கூட்ட நெரிசலை தடுப்பதற்கும் தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் விழாவின்போது நினைவிடத்தின் முன் தற்காலிக கொட்டகை, பந்தல், தடுப்பு அமைக்கப்பட்டு வரு கிறது.

தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி அரசுக்கு பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை அளித்து வருகின்றனர்.

பொதுமக்களின் நீண்ட நாள்கோரிக்கையை ஏற்று, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் இருநுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழக அரசால் அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x